சிமெண்டு கடை உரிமையாளர் வீட்டில் 35 பவுன் நகை கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


சிமெண்டு கடை உரிமையாளர் வீட்டில் 35 பவுன் நகை கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 15 Jun 2019 11:00 PM GMT (Updated: 15 Jun 2019 7:47 PM GMT)

அன்னவாசல் அருகே சிமெண்டு கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே மேலமுத்துடையான்பட்டி கே.கே.நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 50). இவர் வீட்டிற்கு அடுத்த தெருவில் சிமெண்டு மூட்டை விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று செல்வராஜ் கடைக்கு சென்று விட்டார். இதையடுத்து செல்வராஜ் மனைவி கலா ராணி வீட்டை சாத்தாமல் பால் வாங்க கடைக்கு சென்றுள்ளார். பின்னர் பால் வாங்கி கொண்டு, மீண்டும் வீட்டுக்கு கலா ராணி வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அங்கு ஒரு அறையில் பீரோவில் இருந்த துணிகள் உள்ளிட்ட பொருட்கள் தரையில் ஆங்காங்கே சிதறி கிடந்தன. பின்னர் பீரோவை பார்த்த போது அதில் இருந்த 35 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து வெள்ளனூர் போலீஸ் நிலையத்தில் செல்வராஜ் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story