செந்துறை அருகே தூங்கிக்கொண்டிருந்த கணவனை கட்டையால் அடித்து கொன்ற பெண்


செந்துறை அருகே தூங்கிக்கொண்டிருந்த கணவனை கட்டையால் அடித்து கொன்ற பெண்
x
தினத்தந்தி 15 Jun 2019 11:15 PM GMT (Updated: 15 Jun 2019 7:50 PM GMT)

செந்துறை அருகே தூங்கிக்கொண்டிருந்த கணவனை கட்டையால் பெண் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

செந்துறை,

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள கீழமாளிகை காலனி தெருவை சேர்ந்தவர் ராமு (வயது 60). கூலி தொழிலாளி. இவரது மனைவி அசலாம்பாள் (55). இவர்களுக்கு ராம்குமார் (30), அருள் (26) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். அசலாம்பாள் கடந்த சில ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கீழமாளிகை கோவில் திருவிழாவில் நடைபெற்ற கரகாட்டம் பார்த்துவிட்டு நேற்று முன்தினம் ராமு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவருடைய மனைவி திடீரென வீட்டுக்குள் வைத்திருந்த கட்டையை எடுத்து ராமுவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ராமு வீட்டிலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து இறந்தார்.

அதன் பின்னர் வீட்டை பூட்டி விட்டு அருகில் இருந்த கோவிலுக்கு சென்ற அசலாம்பாள் அங்கு சூடம் ஏற்றி சாமி கும்பிட்டார்.

அப்போது தனது கணவரை கொன்று 30 ஆண்டு பகையை தீர்த்து விட்டதாக கூறியுள்ளார். இதனை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கேட்டுவிட்டு வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது ராமு கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த இரும்புலிக்குறிச்சி போலீசார் விரைந்து வந்து ராமுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அசலாம்பாளை கைது செய்து ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி லால்குடி மகளிர் சிறையில் அடைத்தனர். மனநலம் பாதிக்கப்பட்ட மனைவி கட்டையால் அடித்து கணவனை கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story