வத்திராயிருப்பு அருகே நாட்டு வெடிகுண்டு தயாரிக்க வெடிமருந்து சப்ளை செய்தவர் கைது


வத்திராயிருப்பு அருகே நாட்டு வெடிகுண்டு தயாரிக்க வெடிமருந்து சப்ளை செய்தவர் கைது
x
தினத்தந்தி 15 Jun 2019 11:15 PM GMT (Updated: 15 Jun 2019 8:21 PM GMT)

வத்திராயிருப்பு அருகே நாட்டு வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்ட போது எதிர்பாராத விதமாக வெடித்ததில் 2 பேர் படுகாயமடைந்த நிலையில் வெடி மருந்து சப்ளை செய்தவர் கைது செய்யப்பட்டார்.

வத்திராயிருப்பு,

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே தெற்கு கோட்டையூர் பகுதியில் வயல்வெளியில் நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது வெடித்து சிதறியது.

வெடிகுண்டு தயாரித்த தெற்கு கோட்டையூர் காலனி பகுதியை சேர்ந்த அழகர்சாமி, மாகாளி ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

வத்திராயிருப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசக்தி, சப்–இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தி படுகாயம் அடைந்த 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் ஆஸ்பத்திரியில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அந்த பகுதியில் இருந்து 9 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அழகர்சாமியின் கூட்டாளிகள் குருவையா, சங்கரேஸ்வரன் ஆகியோரையும் கைது செய்தார்கள்.

இவர்களிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து இவர்களுக்கு பல ஆண்டுகாலமாக நாட்டு வெடிகுண்டு தயார் செய்வதற்கு வெடி மருந்துகளை மதுரை மாவட்டம் பேரையூரைச் சேர்ந்த பாலமுருகன் (35) என்பவர் சப்ளை செய்து வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story