மதுரையில் பரிதாபம்: கியாசை திறந்துவிட்டு தீக்குளித்து வாலிபர் தற்கொலை


மதுரையில் பரிதாபம்: கியாசை திறந்துவிட்டு தீக்குளித்து வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 15 Jun 2019 10:30 PM GMT (Updated: 15 Jun 2019 8:21 PM GMT)

சிலிண்டரில் உள்ள கியாசை திறந்துவிட்டு தீக்குளித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

மதுரை,

மதுரை மகபூப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் பெத்துராஜ் (வயது 21). இவர் கல்லூரி படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அவர் மனஉளைச்சலில் இருந்து வந்தார். இதன்காரணமாக ஏற்கனவே அவர் 2 முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்புகூட அவர் வி‌ஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து பெத்துராஜை காப்பாற்றினார்கள்.

அதன் பின்னரும் அவரது நடவடிக்கையில் மாற்றம் இல்லை. இந்தநிலையில் நேற்று வீட்டின் ஒரு அறையில் பெத்துராஜ் தனியாக இருந்துள்ளார். அவரது தாயார் வீட்டின் வெளியே அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தார். திடீரென்று வீட்டின் உள்ளே இருந்து தீயில் கருகிய வாடை வந்தது. உடனே அவரது தாயார் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, தீயில் கருகிய நிலையில் பெத்துராஜ் கிடந்தார். உடனே அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தனது மகனை மீட்டு மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

இதையடுத்து பெத்துராஜிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதற்கிடையில் தகவல் அறிந்ததும் எஸ்.எஸ்.காலனி போலீசார் அவரது வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், பெத்துராஜ் வீட்டின் சமையல் அறையில் இருந்த சிலிண்டரை எடுத்து படுக்கை அறைக்கு கொண்டு வந்துள்ளார். பின்னர் அதனை திறந்து கியாஸ் வெளியே வந்த பிறகு தீயை பற்ற வைத்துள்ளார். இதனால் அந்த தீ வீட்டின் அறையில் இருந்த மெத்தை, துணிகள் மீது எரிந்தது. அதன்பிறகு பெத்துராஜ் அதன் மீது படுத்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. பின்னர் பக்கத்து வீட்டினர் விரைந்து செயல்பட்டு அந்த கியாஸ் சிலிண்டரை அங்கிருந்து அப்புறப்படுத்தி உள்ளனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த பெத்துராஜ் சிகிச்சை பலன் அளிக்காமல் சில மணி நேரத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story