செஸ்காம் பெண் அதிகாரிக்கு அரிவாள் வெட்டு - ஊழியர் கைது


செஸ்காம் பெண் அதிகாரிக்கு அரிவாள் வெட்டு - ஊழியர் கைது
x
தினத்தந்தி 15 Jun 2019 8:29 PM GMT (Updated: 15 Jun 2019 8:30 PM GMT)

அலுவலக தோட்டத்தை சுத்தம் செய்ய கூறியதால் செஸ்காம் பெண் அதிகாரியை அரிவாளால் வெட்டிய ஊழியர் கைது செய்யப்பட்டார்.

ஹாசன்,

ஹாசன் டவுன் சந்தேபேட்டே பகுதியை சேர்ந்தவர் சுவாதி தீக்‌ஷித். இவர் ஹாசனில் உள்ள செஸ்காம் (சாமுண்டீஸ்வரி மின்சார வாரியம்) அலுவலகத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். அதே அலுவலகத்தில் மஞ்சுநாத் என்பவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அலுவலகத்தில் உள்ள தோட்டத்தை சுத்தம் செய்யும்படி சுவாதி, மஞ்சுநாத்திடம் தெரிவித்துள்ளார். ஆனால் சுத்தம் செய்ய மறுத்த மஞ்சுநாத், சுவாதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்த வாக்குவாதம் முற்றவே, மஞ்சுநாத் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சுவாதியை வெட்டினார். இதில் சுவாதியின் கன்னத்தில் வெட்டு விழுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் மஞ்சுநாத்தை பிடித்தனர். கன்னத்தில் பலத்த காயமடைந்த சுவாதியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஹாசன் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து ஹாசன் டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மஞ்சுநாத்தை கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story