ஈரோடு ரெயில் நிலையத்தில், ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்


ஈரோடு ரெயில் நிலையத்தில், ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 15 Jun 2019 10:30 PM GMT (Updated: 15 Jun 2019 9:34 PM GMT)

ஈரோடு ரெயில் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு,

ஈரோடு ரெயில் நிலையத்தில் தூய்மை செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கு ஒப்பந்த தொழிலாளர்கள் பணிஅமர்த்தப்பட்டு உள்ளனர். அவர்கள் ரெயில் நிலையத்தை சுத்தம் செய்தல், ரெயில் பெட்டிகளுக்கு தண்ணீர் நிரப்புதல், பெட்டியை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்தநிலையில் சம்பளம் தாமதமாக வழங்கப்படுவதாக கூறி ஈரோடு ரெயில் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தங்களது பணிகளை புறக்கணித்துவிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கூறியதாவது:-

ரெயில் நிலையத்தில் சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகிறோம். தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலமாக நாங்கள் பணிஅமர்த்தப்பட்டு உள்ளோம். மொத்தம் 75 பேர் வேலை செய்து வருகிறோம். எங்களுக்கு ஒரு நாளுக்கு ரூ.487 வீதம் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆனால் ரூ.330 மட்டும் சம்பளமாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் சம்பளம் தாமதமாக வழங்கப்படுகிறது. இந்த மாதத்துக்கான சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை. மேலும், இ.எஸ்.ஐ., வருங்கால வைப்பு நிதி போன்றவை எதுவும் பிடிக்கப்படவில்லை. எனவே எங்களுக்கு உரிய தேதியில் சம்பளம் கிடைக்க ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story