நாகர்கோவிலில் நகை பட்டறை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை கடன் தொல்லையால் விபரீத முடிவு


நாகர்கோவிலில் நகை பட்டறை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை கடன் தொல்லையால் விபரீத முடிவு
x
தினத்தந்தி 16 Jun 2019 11:15 PM GMT (Updated: 16 Jun 2019 2:44 PM GMT)

நாகர்கோவிலில் நகை பட்டறை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடன் தொல்லையால் அவர் விபரீத முடிவை தேடி கொண்டார்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் ஊட்டுவாழ்மடத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது 57). இவர் மீனாட்சிபுரம் பகுதியில் நகை பட்டறை நடத்தி வந்தார். இவர் நேற்றுமுன்தினம் பட்டறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். வெகுநேரமாகியும் சுப்பிரமணியன் வீடு திரும்பவில்லை. இதனால் சுப்பிரமணியனின் மனைவி மற்றும் உறவினர்கள் அவரை தேடி பட்டறைக்கு சென்றனர். அங்கு சுப்பிரமணியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதனை கண்ட அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதுபற்றி கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுப்பிரமணியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, நகை பட்டறை தொழிலில் சுப்பிரமணியனுக்கு நஷ்டம் ஏற்பட்டு வந்தது. நஷ்டத்தை சமாளிக்கவும், தொழிலை மேம்படுத்தவும் சிலரிடம் அவர் கடன் வாங்கியதாக தெரிகிறது. பின்னரும் தொழிலில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டது. மேலும் பணத்தை கடனாக கொடுத்தவர்கள் திருப்பி கேட்டு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் சுப்பிரமணியனால் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்க முடியவில்லை.

இதனால் கடந்த சில நாட்களாகவே சுப்பிரமணியன் மனவருத்தத்தில் இருந்தார், இந்த நிலையில் சுப்பிரமணியன் நேற்று முன்தினம் இரவு தனது கடையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் உடலில் பல இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. எனவே தற்கொலை செய்வதற்கு முன் சுப்பிரமணியன் தனது உடலின் பல இடங்களில் கத்தியால் குத்திக்கொண்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். கடன் தொல்லை காரணமாகவே அவர் விபரீத முடிவை தேடி கொண்டதும் தெரிய வந்தது. இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story