வெங்கல் அருகே முகவரி கேட்பது போல் பெண்ணிடம் 8 பவுன் நகை பறிப்பு


வெங்கல் அருகே முகவரி கேட்பது போல் பெண்ணிடம் 8 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 16 Jun 2019 10:15 PM GMT (Updated: 16 Jun 2019 6:23 PM GMT)

வெங்கல் அருகே முகவரி கேட்பது போல் பெண்ணிடம் 8 பவுன் நகை பறிக்கப்பட்டது.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் அருகே வெளியூர் கிராமத்தை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 50). விவசாயி. இவரது மனைவி சந்திரகலா (48). நேற்று முன்தினம் மாலை சந்திரகலா தனது வீட்டுக்கு தேவையான பொருட்களை பஜார் வீதிக்கு சென்று வாங்கி கொண்டு வீட்டுக்கு நடந்து வந்தார். அப்போது ஹெல்மெட் அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் சந்திரகலாவை வழிமறித்து கீழானூர் செல்வதற்கு வழி கேட்டனர்.

சந்திரகலா அவர்களுக்கு வழி கூறி கொண்டிருந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் சந்திரகலா அணிந்திருந்த 8 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு வேகமாக தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை நோக்கி சென்று விட்டார்கள்.

இது குறித்து வெங்கல் போலீஸ் நிலையத்தில் சந்திரகலா புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேலு தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணின் கழுத்தில் இருந்து நகையை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story