பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் விவசாயிகள் நிதிஉதவி பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர்கள் தகவல்


பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் விவசாயிகள் நிதிஉதவி பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர்கள் தகவல்
x
தினத்தந்தி 16 Jun 2019 11:00 PM GMT (Updated: 16 Jun 2019 8:09 PM GMT)

பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் விவசாயிகள் நிதிஉதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

அரியலூர்,

பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதிதிட்டம் கடந்த பிப்ரவரி 24-ந் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவியானது, 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இந்த திட்டம் தற்போது அனைத்து விவசாயிகளுக்கும் அதாவது, சிறு, குறு, நடுத்தரம் மற்றும் பெரிய விவசாயிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. எனவே, உயர் வருவாய் பிரிவினர் நிறுவனத்தின் பெயரில் நிலம் உள்ளவர்கள் உள்ளிட்ட விலக்களிக்கப்பட்ட நபர்கள் தவிர, தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் சேர கிராம நிர்வாக அதிகாரி, வேளாண்மை உதவி அலுவலரிடம் விண்ணப்பம் அளித்து பயன்பெறலாம்.

30-ந் தேதிக்குள்

மேலும் வாரிசு அடிப்படையில் பட்டா மாறுதல் செய்து கொள்ளும் வாரிசுதாரர்களும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இதுவரை நிலமானது இறந்த தனது தாய் அல்லது தந்தை பெயரில் இருந்தால், அதற்குரிய வாரிசுதாரர், சம்பந்தப்பட்ட பகுதியின் தாசில்தாரை அணுகி உரிய முறையில் விண்ணப்பம் அளித்து வருகிற 30-ந் தேதிக்குள் பட்டா மாறுதல் செய்து, அதன் அடிப்படையில் இந்த பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர்கள் சாந்தா (பெரம்பலூர்), விஜயலட்சுமி (அரியலூர்) ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

Next Story