ராட்சத அலையில் சிக்கி ரூ.1½ கோடி விசைப்படகு கடலில் மூழ்கியது மீட்கும் பணி தீவிரம்


ராட்சத அலையில் சிக்கி ரூ.1½ கோடி விசைப்படகு கடலில் மூழ்கியது மீட்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 17 Jun 2019 11:15 PM GMT (Updated: 17 Jun 2019 6:24 PM GMT)

ராட்சத அலையில் சிக்கி ரூ.1½ கோடி விசைப்படகு-மீன்பிடி உபகரணங்கள் கடலில் மூழ்கின. இதை மீட்கும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நாகப்பட்டினம்,

நாகை நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 500 பைபர் படகு மற்றும் 80 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கிராம மீனவர்கள் பிடித்து வரும் மீன்கள் நாகை கடுவையாறு பழைய மீன்பிடி துறைமுகத்தில் விற்பனை செய்து வருகின்றனர்.

இங்கு போதிய இடவசதி இல்லாததால் விசைப்படகுகளை நிறுத்துவதற்கும், மீன் விற்பனை செய்வதற்கும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் மீனவர்களுக்கு போதிய வருவாய் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். இதையடுத்து நம்பியார் நகரில் புதிதாக மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதை தொடர்ந்து மீனவர்கள் பங்களிப்புடன் புதிய மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான ஆயத்த பணிகளில் அரசு ஈடுபட்டு வருகிறது.

புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும் வரை மீன்களை விற்பனை செய்யவும், படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்கவும், கடுவையாற்றில் இடம் தர வேண்டும் என்று நம்பியார்நகர் மீனவர்கள் மீன்வளத்துறையினரிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதுசம்பந்தமாக மீன்வளத்துறையினர் தீர்வு காணாததால், மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்த பிறகும் இந்த கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விசைப்படகுகளை நிறுத்த போதிய இடவசதி இல்லாததால், நம்பியார் நகர் கடல் பகுதியில் படகுகளை நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் நம்பியார் நகரை சேர்ந்த சின்னத்தம்பி (வயது 35) என்பவருக்கு சொந்தமான விசைப்படகை நம்பியார் நகர் கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைத்திருந்தார். இவர் நேற்று காலை விசைப்படகை பார்க்க சென்றுள்ளார். அப்போது அவரது படகு காணாததால் அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து மற்றொரு படகில் மீனவர்கள் கடலில் சென்று தேடி பார்த்த போது சின்னத்தம்பியின் விசைப்படகு கடலில் மூழ்கி கிடந்தது. கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகு ராட்சத அலையில் சிக்கி மூழ்கியதாக தெரிகிறது. மேலும் அந்த படகில் இருந்த வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களும் கடலில் மூழ்கியுள்ளன.

இதையடுத்து 10-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் சென்று மூழ்கிய விசைப்படகை மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடலில் மூழ்கிய விசைப்படகின் மதிப்பு ரூ.1 கோடி எனவும், மீன்பிடி உபகரணங்களின் மதிப்பு ரூ.50 லட்சம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. படகு நிறுத்த துறைமுக வசதி இல்லாததால், அலையின் சீற்றத்தால் கடலில் விசைப்படகு மூழ்கிய சம்பவம் மீனவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story