சவுதிஅரேபியாவில் இருந்து சென்னைக்கு ‘ஸ்பீக்கர்’ பெட்டிக்குள் மறைத்து ரூ.38 லட்சம் தங்கம் கடத்தல்; ஆந்திர வாலிபர் கைது


சவுதிஅரேபியாவில் இருந்து சென்னைக்கு ‘ஸ்பீக்கர்’ பெட்டிக்குள் மறைத்து ரூ.38 லட்சம் தங்கம் கடத்தல்; ஆந்திர வாலிபர் கைது
x
தினத்தந்தி 17 Jun 2019 11:45 PM GMT (Updated: 17 Jun 2019 10:16 PM GMT)

சவுதி அரேபியாவில் இருந்து சென்னைக்கு ‘ஸ்பீக்கர்’ பெட்டிக்குள் மறைத்து கடத்தி வந்த ரூ.38 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஆந்திர வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாட்டில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது சவுதிஅரேபியா தலைநகர் ரியாத்தில் இருந்து பக்ரைன் வழியாக சென்னைக்கு விமானம் வந்தது. அதில் ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த சாதிக் ஷேக்(வயது 22) என்பவர் வந்தார்.

அவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் ‘புளூ டூத்’ மூலம் இயக்கப்படும் ஒரு ‘ஸ்பீக்கர்’ பெட்டி இருந்தது. அதை சுங்க இலாகா அதிகாரிகள் பிரித்து பார்த்தனர்.

அதில் 11 தங்கக்கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.38 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 100 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக ஆந்திர வாலிபர் சாதிக் ஷேக்கை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் அவரிடம், அந்த தங்கத்தை யாருக்காக சவுதி அரேபியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தார்? எனவும் விசாரித்து வருகின்றனர்.


Next Story