தடையின்றி குடிநீர் வினியோகம் செய்வதை கள ஆய்வு செய்ய வேண்டும்; அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு


தடையின்றி குடிநீர் வினியோகம் செய்வதை கள ஆய்வு செய்ய வேண்டும்; அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 18 Jun 2019 10:45 PM GMT (Updated: 18 Jun 2019 8:20 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்வதை அதிகாரிகள் கள ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என்று கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்வது குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி, ஊரகம் மற்றும் நகர்புற பகுதிகளில் குடிநீர் வினியோகம் தடையின்றி நடைபெறும் பொருட்டு நிர்வாக அனுமதி அளிக்கப்பட்ட பணிகளின் செயலாக்கம் குறித்து பணிகள் வாரியாக ஆய்வு மேற்கொண்டார்.அப்போது கலெக்டர் சுப்பிரமணியன் கூறியதாவது:–

கிராம ஊராட்சிகளை பொறுத்தவரை முன்னேற்றத்தில் உள்ள பணிகளை உதவி இயக்குனர் நிலையிலான மண்டல அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள் மற்றும் இதர பணியளர்கள் கள ஆய்வு செய்து போர்க்கால அடிப்படையில் பணிகளை செயல்படுத்தி முடிக்க வேண்டும். பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோருக்கு ஊராட்சிகளை பகிர்ந்து ஒதுக்கீடு செய்து தினசரி குடிநீர் வினியோகம் தடையின்றி நடைபெறுவதை கண்காணிக்க வேண்டும். முறையற்ற குடிநீர் இணைப்புகளை கண்டறிந்து அவற்றை துண்டிப்பு செய்து அதற்கான அறிக்கையை ஊராட்சிகளின் உதவி இயக்குனருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

பேரூராட்சி மற்றும் நகராட்சிகளை பொறுத்தவரை பேரூராட்சிகளின் உதவி இயக்குனர், நகராட்சி ஆணையர்களின் கட்டுப்பாட்டில் பணிபுரியும் உதவி செயற் பொறியாளர்கள், பொறியாளர்கள், நகர்புற ஆய்வாளர்களை வார்டுகள் வாரியாக பொறுப்பு நிர்ணயம் செய்து குடிநீர் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மேலும் இந்த அலுவலர்களை அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் தினசரி கள ஆய்வு மேற்கொள்ள செய்து குடிநீர் வினியோகம் செய்வதில் பிரச்சினைகள் குறித்த அறிக்கையை பெற்று பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story