நாமக்கல் பஸ் நிலையத்தில் காதல்ஜோடி வி‌‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி


நாமக்கல் பஸ் நிலையத்தில் காதல்ஜோடி வி‌‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 19 Jun 2019 11:00 PM GMT (Updated: 19 Jun 2019 4:51 PM GMT)

நாமக்கல் பஸ் நிலையத்தில் காதல்ஜோடி வி‌‌ஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல், 

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள புலியாம்பாறை கிராமத்தை சேர்ந்தவர் கிரு‌‌ஷ்ணன். இவரது மகன் செந்தூரான் (வயது 24). இவரும் திருச்சி மாவட்டம் பூலியாம்பாளையம் பகுதியை சேர்ந்த அஞ்சலி (வயது 20) என்பவரும் திருப்பூரில் உள்ள தனியார் பனியன் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகின்றனர்.அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. நாளடைவில் அது காதலாக மாறியது. இந்த காதலுக்கு இருவரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் இருவரும் நண்பர்கள் உதவியுடன் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர்.

இதற்கிடையே நேற்று முன்தினம் திருச்சியில் இருந்து நாமக்கல் வந்த காதல் ஜோடியினர் பஸ் நிலையத்தில் வி‌‌ஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தனர். இதை பார்த்த ஆட்டோ டிரைவர்கள் நாமக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். மேலும் வி‌‌ஷம் குடித்து உயிருக்கு போராடிய செந்தூரான் மற்றும் அஞ்சலி ஆகிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக அவர்கள் இருவரும் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.

காதல்ஜோடி வி‌‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நேற்று முன்தினம் இரவு நாமக்கல் பஸ் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story