கும்பகோணம் பகுதியில் வெள்ளரி விளைச்சல் அதிகரிப்பு விவசாயிகள் மகிழ்ச்சி


கும்பகோணம் பகுதியில் வெள்ளரி விளைச்சல் அதிகரிப்பு விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 19 Jun 2019 10:30 PM GMT (Updated: 19 Jun 2019 7:04 PM GMT)

கும்பகோணம் பகுதியில் வெள்ளரி விளைச்சல் அதிகரித்து இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நெல் சாகுபடியை போல காய்கறி சாகுபடியும் அதிகளவில் நடைபெற்று வருகிறது. தண்ணீர் பற்றாக்குறையால் நெல் சாகுபடி தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில் விவசாயிகள் காய்கறி உள்ளிட்ட தோட்ட பயிர்களை சாகுபடி செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள். காய்கறி சாகுபடியில் வெள்ளரி சாகுபடி கடந்த சில ஆண்டுகளாக முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

வெயில் காலத்தில் உடல் ஆரோக்கியத்தை காக்க உதவும் வெள்ளரிக்கு சந்தைகளில் அமோக வரவேற்பு உள்ளது. இதன் காரணமாக கும்பகோணம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கோடை காலத்தையொட்டி வெள்ளரியை தவறாமல் சாகுபடி செய்கிறார்கள்.

அறுவடை

ஆண்டுதோறும் தை மாதம் வெள்ளரி சாகுபடிக்கான ஆரம்ப கட்ட பணிகள் நடக்கின்றன. பயிர் செய்த 45 நாட்களில் வெள்ளரி அறுவடைக்கு தயாராகி விடுகிறது. ஆடி மாதம் வரை வெள்ளரி அறுவடை நீடிக்கிறது.

இந்த ஆண்டு கும்பகோணம் பகுதியில் வெள்ளரி விளைச்சல் அதிகரித்திருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சில விவசாயிகள் வெள்ளரியை பிஞ்சாகவும், சிலர் பழங்களாகவும் அறுவடை செய்கிறார்கள்.

விற்பனை

அறுவடை செய்யப்பட்ட வெள்ளரி பிஞ்சுகள் ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல் வெள்ளரி பழம் ஒன்று ரூ.20 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

வெள்ளரி பழங்கள் உடல் சூட்டை தணிக்க உதவும். இந்த ஆண்டு பட்டீஸ்வரம் பகுதியில் வெள்ளரி விளைச்சல் அதிகமாக உள்ளது. வெயில் காலங்களில் வெள்ளரி விற்பனையும் அதிகமாக நடப்பதால் வெள்ளரி சாகுபடியை ஆர்வத்துடன் மேற்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

Next Story