தாராபுரம் அருகே வாலிபருடன் விஷம் குடித்த கள்ளக்காதலியும் சாவு


தாராபுரம் அருகே வாலிபருடன் விஷம் குடித்த கள்ளக்காதலியும் சாவு
x
தினத்தந்தி 19 Jun 2019 10:51 PM GMT (Updated: 19 Jun 2019 10:51 PM GMT)

தாராபுரம் அருகே வாலிபருடன் விஷம் குடித்த கள்ளக்காதலியும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

தாராபுரம்,

வாலிபருடன் விஷம் குடித்த கள்ளக்காதலியும் சிகிச்சை பலனின்றி இறந்த இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுதாவது:-

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள டி.காளிப்பாளையம் எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் அஜீத்குமார் (வயது 25). தொழிலாளி. இவருடைய மனைவி துர்காதேவி. இவர்களுக்கு, 8 மாத குழந்தை உள்ளது. அதே பகுதியைச் சேர்ந்தவர் மணிமேகலை (38). இவருக்கு திருமணமாகி கணவர் இறந்துவிட்ட நிலையில், தற்போது 15 வயதுள்ள மகனுடன் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் அஜீத்குமாருக்கும். மணிமேகலைக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. அதன் பிறகு இவர்கள் இருவரும் யாருக்கும் தெரியாமல் தனிமையில் அடிக்கடி சந்தித்துக்கொண்டனர். மேலும் பல்வேறு இடங்களுக்கும் உல்லாச பறவையாய் சென்று வந்தனர்.

இதற்கிடையில் இவர்களின் கள்ளக்காதல் விவகாரம், அஜீத்குமாரின் மனைவி துர்காதேவிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தெரிந்துவிட்டது. அதையடுத்து அவர்கள் அஜீத்குமாரின் கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு அவருக்கும் அறிவுரை வழங்கினார்கள். அதேபோல் மணிமேகலைக்கும் புத்திமதி கூறினார்கள்.

ஆனால் அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த மோகப்பிணைப்பு, அறிவுரைகளை அலட்சியம் செய்ய வைத்தது.

இந்த உலகில் இனி உல்லாசமாக வாழ்வது என்பது இயலாத காரியம் என விரக்தியடைந்த கள்ளக்காதல் ஜோடி, உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்தனர். இதனால் மனவேதனை அடைந்த கள்ளக்காதலர்கள் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, சம்பவத்தன்று இரவு அருகே இருந்த காட்டிற்குச் சென்று, இருவரும் விஷம் குடித்துவிட்டு மயங்கிக் கிடந்தனர். மறுநாள் காலையில் அந்த பகுதி வழியாக சென்றவர்கள் கள்ளக்காதலர்களை மீட்டு அரசு தாராபுரம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அஜீத்குமாரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மணிமேகலைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக அவர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த மணிமேகலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒன்று சேரமுடியவில்லை என்பதற்காக கள்ளக்காதலர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story