திருவாரூர் மாவட்டத்தில் மானிய விலையில் அம்மா ஸ்கூட்டர் பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்


திருவாரூர் மாவட்டத்தில் மானிய விலையில் அம்மா ஸ்கூட்டர் பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 20 Jun 2019 10:45 PM GMT (Updated: 20 Jun 2019 7:25 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் மானிய விலையில் அம்மா ஸ்கூட்டர் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

திருவாரூர்,

உழைக்கும் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு மானிய விலையில் அம்மா ஸ்கூட்டர் பெற விண்ணப்பிக்கலாம்.

இந்த திட்டத்தின்கீழ் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ஸ்கூட்டர் வாங்க மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்ச மானியமாக ரூ.25 ஆயிரம் இவற்றில் எது குறைவோ அத்தொகை வழங்கப்படும். 125 சிசி-க்கு மேற்படாத திறன் கொண்ட கியர் இல்லாத, ஆட்டோ கியர் வாகனமாக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பம் அளிக்கும் நாளில் ஸ்கூட்டர் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரே அந்த குடும்பத்தில் பிரதான வருவாய் ஈட்டுபவராக இருக்க வேண்டும். குடும்ப தலைவி, ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளி, திருமணமாகாத 35 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆதிதிராவிட வகுப்பினர் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

4-ந்தேதி கடைசிநாள்

விண்ணப்பங்கள் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள், மாவட்ட மகளிர் திட்ட அலுவலகம் ஆகிய இடங்களில் விண்ணப்பங்கள் நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் உரிய சான்றுகளை இணைத்து சமர்ப்பிக்க அடுத்த மாதம் (ஜூலை) 4-ந் தேதி கடைசி நாளாகும். எனவே தகுதி உள்ள பெண்கள் இந்த சலுகையை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story