குன்னம் அருகே பரபரப்பு ஆசிரியர்களின் கடன் தொகை ரூ.13 லட்சம் கையாடல் ஓய்வுபெற்ற ஊழியர் சிக்கினார்


குன்னம் அருகே பரபரப்பு ஆசிரியர்களின் கடன் தொகை ரூ.13 லட்சம் கையாடல் ஓய்வுபெற்ற ஊழியர் சிக்கினார்
x
தினத்தந்தி 20 Jun 2019 10:15 PM GMT (Updated: 20 Jun 2019 7:56 PM GMT)

குன்னம் அருகே ஆசிரியர்களின் ரூ.13 லட்சம் கடன் தொகையை கையாடல் செய்த ஓய்வுபெற்ற ஊழியர் சிக்கினார்.

குன்னம்,

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள வேப்பூர் கிராமத்தில் வட்டார கல்வி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன் கல்வி அலுவலராக ஜீவரத்தினம் பணிபுரிந்து வருகிறார். இவருடைய கட்டுப்பாட்டில் 100-க்கும் மேற்பட்ட அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இந்த அலுவலகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எழுத்தராக பணியாற்றியவர் அந்தூர் கிராமத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன். இவரின் பணி ஆசிரியர்களின் கணக்கில் சம்பளம் போடுவது, அவர்களுக்கு கடன் அனுமதி பெற்று தருவது ஆகும். இந்நிலையில் இவர் கடந்த மே மாதம் 31-ந் தேதி பணி ஓய்வு பெற்றார். ஆசிரியர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதியிலிருந்து தேவைக்கேற்ப கடனாக பெறுவது வழக்கம். கடன் கேட்டு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு வேப்பூர் வட்டார கல்வி அலுவலர் கடன் வழங்க அனுமதி வழங்கியதும் அதனை கருவூலத்தில் சமர்ப்பித்து கடன் கேட்ட ஆசிரியர்களின் வங்கி கணக்கில் கடன் தொகை வரவு செய்யப்படும்.

நூதன முறையில்...

இந்நிலையில் தமிழ்ச்செல்வன் வேப்பூர் வட்டார கல்வி அலுவலகத்தில் பணியாற்றியபோது குன்னம் பகுதி தொடக்கப்பள்ளிகளில் வேலை பார்க்கும் குன்னம் அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் சேகர், பெருமத்தூர் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் ராஜேந்திரன், பீல்வாடி அரசு தொடக்க பள்ளி ஆசிரியர் செல்லம் உள்ளிட்டவர்கள் கடன் கேட்டு விண்ணப்பித்து இருந்தனர். அவர்களது வைப்பு நிதியிலிருந்து கடன் பெற்று தரும் போது குன்னம் கருவூலத்திருந்து சம்மந்தப்பட ஆசிரியர்களின் வங்கி கணக்கு எண்ணை கொடுக்காமல் எழுத்தர் தமிழ்ச்செல்வன் தனது வங்கி கணக்கு எண்ணை கொடுத்து பின்னர் 3 ஆசிரியர்களின் கடன் தொகையான ரூ. 13 லட்சத்து 5 ஆயிரத்தை தனது கணக்கில் ஏற்றி கையாடல் செய்து அந்த பணத்தை எடுத்து செலவு செய்துள்ளார். இதுபோல் பலரது பணத்தை நூதன முறையில் தனது கணக்கில் மாற்றி கையாடல் செய்ததாக தெரிகிறது.

முறைகேடு

வருங்கால வைப்பு நிதியிலிருந்து கடன் கேட்டு விண்ணப்பம் செய்தவர்களுக்கு கடன் அனுமதி வழங்கப்பட்டும், கடன் கணக்கு துவங்கப்பட்டும் உள்ளது. ஆனால் சம்பந்தப்பட்ட வங்கி கணக்கில் கடன் தொகை செலுத்தப் படவில்லை. இதனால் பணத்தை பறிகொடுத்த ஆசிரியர்கள் வேப்பூர் வட்டார கல்வி அலுவலர் ஜீவரத்தினத்தை அணுகி முறையிட்டு உள்ளனர். பின்னர் பதிவேடுகள் மற்றும் குன்னம் கருவூலக கணக்கு புத்தகத்தை ஆய்வு செய்தபோது ஆசிரியர்களின் கடன் தொகை சம்பந்தப்பட்ட ஆசிரியர்களது கணக்கில் வரவாகவில்லை என்பதும், வேப்பூர் வட்டார கல்வி அலுவலகத்தில் பணியாற்றிய ஏ1 பிரிவு எழுத்தர் தமிழ்ச்செல்வன் வங்கி கணக்கில் பணம் வரவாகியுள்ளதும் தெரியவந்தது. இது போல் சுமார் ரூ. 25 லட்சத்திற்கு மேல் முறைகேடு செய்தது அம்பலமாகி உள்ளது.

ரூ.9 லட்சம் பறிமுதல்

இதையடுத்து வேப்பூர் வட்டார கல்வி அலுவலர் ஜீவரத்தினம் தனது மேல் அதிகாரியான மாவட்ட கல்வி அலுவலர் குழந்தைராஜன் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருளரங்கன் ஆகியோரிடம் கையாடல் செய்தது குறித்து தெரிவித்து உள்ளார். ஆசிரியர்களின் கடன்தொகையை முறைகேடு செய்தது குறித்து உரிய விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கவேண்டும் என மாவட்ட கல்வி அலுவலர் குழந்தைராஜனுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருளரங்கன் உத்தரவிட்டார். இதையடுத்து விசாரணைக்காக வருமாறு ஓய்வு பெற்ற எழுத்தர் தமிழ்ச்செல்வனுக்கு வேப்பூர் வட்டார கல்வி அலுவலகத்திலிருந்து கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் தமிழ்ச்செல்வன் விசாரணைக்கு வராமல் உடல் நலம் சரியில்லை என அரியலூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்து கொண்டார். அப்போது தமிழ்ச்செல்வனிடமிருந்து ரூ.9 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் மீதி பணத்திற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிகிறது. தமிழ்ச்செல்வனின் கையாடலுக்கு கருவூலக தரப்பில் உதவியது யார்? என்பது குறித்தும் விசாரணை நடைபெறுகிறது.

Next Story