கஜா புயலில் ஓட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு முழுமையான இழப்பீடு - அரசாணை பிறப்பிக்க மதுரை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு


கஜா புயலில் ஓட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு முழுமையான இழப்பீடு - அரசாணை பிறப்பிக்க மதுரை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 20 Jun 2019 10:45 PM GMT (Updated: 20 Jun 2019 8:14 PM GMT)

கஜா புயலில் ஓட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு முழுமையான இழப்பீடு வழங்க வேண்டும். இதுகுறித்து தமிழக அரசு அரசாணை பிறப்பிக்க, மதுரை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டது.

மதுரை, 

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை கரம்பையத்தைச் சேர்ந்த முருகானந்தம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த நவம்பர் மாதம் வீசிய கஜா புயலில் எனது ஓட்டு வீடு முழுமையாக சேதமடைந்தது. இதற்கு அரசு அறிவித்தபடி இழப்பீடு கேட்டு விண்ணப்பித்தேன். என் விண்ணப்பத்தை ஏற்று வீட்டினை வருவாய் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இருப்பினும் இதுவரை இழப்பீடு வழங்கவில்லை. இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்’ என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, ‘கஜா புயல் நிவாரணம் தொடர்பாக வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் முழுமையாக சேதமடைந்த ஓட்டு வீடுகளுக்கு நிவாரணம் வழங்குவது பற்றி குறிப்பிடப்படவில்லை. அதே நேரத்தில் பகுதியாக சேதமடைந்த ஓட்டு வீடுகளுக்கு நிவாரண தொகை குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தான் மனுதாரருக்கு இழப்பீடு வழங்கவில்லை. மனுதாரருக்கு இழப்பீடு வழங்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது’ என்று வாதாடினார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

கஜா புயலால் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டதை மறக்க முடியாது. இந்த புயலால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் வாழ்வாதாரங்களையும், உடைமைகளையும், மரங்களையும், பயிர்களையும் இழந்து தவித்தனர். மீனவர்கள் படகுகளை இழந்தனர்.

இவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்கியது. இதில் ஓட்டு வீடுகளை முழுமையாக இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. கூரை வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கியபோது, ஓட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்காதது திட்டமிட்டு செய்யப்பட்டதா? எனத் தெரியவில்லை. பல்வேறு இழப்புகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ள நிலையில் ஓட்டு வீடுகளை முழுமையாக இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படாததை ஏற்க முடியாது. அரசின் இந்த நடவடிக்கை திருப்திகரமாக இல்லை. இது ஓட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாக கருதுகிறோம்.

இதனால் கஜா புயலால் ஓட்டு வீடுகளை முழுமையாக இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக மாநில வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கொள்கை முடிவு எடுக்க வேண்டும். அந்த கொள்கை முடிவு அடிப்படையில் அரசாணை பிறப்பிக்க வேண்டும். இந்த அரசாணையில் அறிவிக்கப்படும் நிவாரண தொகை, பாதிக்கப்பட்டவர்கள் புதிதாக முழு வீடு கட்டுவதற்கு உதவும் வகையில் இருக்க வேண்டும்.

ஓட்டு வீடுகளை முழுமையாக இழந்தவர்களுக்கு முழு இழப்பீடு வழங்கும் வரை இடைக்கால நிவாரண நிதி வழங்குவது தொடர்பாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் முடிவு செய்ய வேண்டும். இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Next Story