வெள்ளமடம் கூட்டுறவு சங்கத்துக்கு ரூ.22 லட்சத்தில் புதிய கட்டிடம் தளவாய் சுந்தரம் திறந்து வைத்தார்


வெள்ளமடம் கூட்டுறவு சங்கத்துக்கு ரூ.22 லட்சத்தில் புதிய கட்டிடம் தளவாய் சுந்தரம் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 20 Jun 2019 10:30 PM GMT (Updated: 20 Jun 2019 9:09 PM GMT)

வெள்ளமடம் கூட்டுறவு சங்கத்துக்கு ரூ.22 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் திறந்து வைத்தார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் வெள்ளமடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்காக ரூ.22 லட்சத்தில் புதிய அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது.

இதில் சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி விவசாயிகளுக்கு ரூ.64 லட்சம் மதிப்பில் கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினார்.

விழாவில் தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய்சுந்தரம் பேசியதாவது:-

வாழ்த்துக்கள்

நடந்து முடிந்த கூட்டுறவு சங்க தேர்தலில் பல இன்னல்களை சந்தித்து வெற்றி பெற்று, இந்த கூட்டுறவு வங்கியினை திறந்து வைத்து கடனுதவிகளை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். கூட்டுறவு கடன் சங்கத்தில் பணிபுரிபவர்களுக்கும், சங்க உறுப்பினர்களுக்கும் இடையே நல்லுறவினை வளர்த்துக்கொள்ள வேண்டும். சங்க உறுப்பினர்கள் கட்சி வேறுபாடின்றி ஒருங்கிணைந்து இந்த கூட்டுறவு சங்க வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து, இப்பகுதி மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். கூட்டுறவு சங்க சட்டமானது, மிகக்கடுமையான சட்டமாகும். எனவே சங்க உறுப்பினர்கள், அலுவலர்கள் யாராக இருந்தாலும், தவறுகள் நேராத வண்ணம் மிகக்கவனமாக செயலாற்ற வேண்டும். தவறுகள் நடக்கும் பட்சத்தில் கடுமையான சட்டத்திற்கு ஆட்பட்டு, மீளமுடியாத துயரத்தையும், இன்னல்களையும் அனுபவிக்க நேரிடும்.

பொதுமக்களும் கூட்டுறவு சங்க உறுப்பினர்களும் இந்த சங்கத்திற்கு அதிக வைப்பு நிதிகளை செலுத்தி, அதிக கடனுதவிகளை அளித்து விவசாயிகளுக்கு உதவுவதோடு, சங்கத்திற்கு லாபத்தை ஈட்டவும் கேட்டுக்கொள்கிறேன். கூட்டுறவு சங்கமே நாட்டின் வளர்ச்சி என்பதற்கிணங்க இந்த சங்கம் மேன்மேலும் வளரவும் எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு தளவாய் சுந்தரம் பேசினார்.

சுயஉதவி குழுக்கள்

விழாவில் 5 சுயஉதவி குழுக்களுக்கு ரூ.52.75 லட்சம் மதிப்பில் கடனுதவிக்கான காசோலைகளையும், 5 நபர்களுக்கு விவசாய நகைக்கடனாக ரூ.11.25 லட்சத்துக்கான காசோலைகளையுமாக மொத்தம் ரூ.64 லட்சம் மதிப்பில் கடனுதவிக்கான காசோலைகளை தளவாய்சுந்தரம் வழங்கினார்்

விழாவில் மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ஏ.அசோகன், மாவட்ட அரசு ரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவர் ஜாண்தங்கம், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணைய உறுப்பினர் ராஜன், மாவட்ட மீனவர் கூட்டுறவு இணையத் தலைவர் திமிர்த்தியுஸ், ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் கிருஷ்ணகுமார், பொழிக்கரை மீனவர் கூட்டுறவு சங்கத்தலைவர் சேவியர் மனோகரன், வெள்ளமடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் ஷேக்செய்யது அலி, கடன்சங்க அலுவலர்கள், சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர்் கலந்து கொண்டனர்.

Next Story