ரெயில்களை தனியாருக்கு கொடுக்கும் திட்டத்துக்கு அதிகாரிகள் எதிர்ப்பு


ரெயில்களை தனியாருக்கு கொடுக்கும் திட்டத்துக்கு அதிகாரிகள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 20 Jun 2019 11:00 PM GMT (Updated: 21 Jun 2019 12:14 AM GMT)

ரெயில்களை தனியாருக்கு கொடுக்க வேண்டும் என்ற திட்டத்துக்கு அதிகாரிகள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மதுரை,

மத்திய அரசு ரெயில்வே துறையை தனியார்மயமாக்கும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்காக ரெயில்வேக்கான ‘ரோடு மேப்‘ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதைதொடர்ந்து தற்போது 100 நாள் செயல்திட்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த செயல்திட்டத்தில் மத்திய அரசு துறைகளில் 100 நாட்களில் என்ன வளர்ச்சிப்பணிகள், நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும் என்பதை அரசுக்கு தெரிவிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த 100 நாள் செயல்திட்டம் ரெயில்வே துறைக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில், முதற்கட்டமாக 2 எக்ஸ்பிரஸ் ரெயில்களை தனியாருக்கு கொடுக்க வேண்டும்.

அதாவது பிரீமியம் என்று சொல்லப்படும் ரெயில்களை தனியாருக்கு கொடுக்க பரிந்துரைக்க வேண்டும். இதில் சுவீதா சிறப்பு ரெயில்கள், ராஜதானி, சதாப்தி, தூரந்தோ, தேஜஸ் ஆகிய ரெயில்களில் 2 ரெயில்களை ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் தனியாருக்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் எந்த ரெயிலை தனியாருக்கு கொடுக்கலாம் என்று அந்தந்த கோட்ட மேலாளர்கள் பரிந்துரைக்கும்படி கோரப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்களின் கருத்துகளும் கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, ரெயில்களில் 10 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை டிக்கெட் கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது. இதில் நோயாளிகள், மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் என ஒவ்வொருவருக்கும் பல்வேறு விதங்களில் கட்டண சலுகை வழங்கப்படுகிறது.

ஆனால் இந்த 100 நாள் செயல்திட்டத்தில் எத்தனை சதவீதம் கட்டண சலுகையை சம்பந்தப்பட்ட பயணிகள் அரசுக்கு விட்டுக்கொடுக்க விரும்புகின்றனர் என்பதை தெரிவிக்க வேண்டும். அதாவது, கியாஸ் மானியத்தை விட்டுக்கொடுக்கும் திட்டம் போல, சலுகைக்கட்டணத்தை விட்டுக்கொடுக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரெயில்களில் 50 சதவீதம் சலுகைக்கட்டணத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணி 10 சதவீதம் முதல் 45 சதவீதம் வரை அவர் விரும்பும் அளவுக்கு அரசுக்கு விட்டுக்கொடுக்கலாம். தற்போது ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு சலுகை கட்டணத்தை விட்டுக்கொடுக்க விரும்புகிறீர்களா என கேட்கப்படுகிறது.

விரைவில் ரெயில்நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் சலுகைக்கட்டணத்தில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கும் இது போன்று கேட்கப்படும். எனவே சலுகைக்கட்டணத்தை விட்டுக்கொடுக்கும் திட்டத்தை அதிகாரிகள் பரவலாக விளம்பரப்படுத்த வேண்டும் என்றும் அந்த செயல்திட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ரெயில் பெட்டிகள், என்ஜின்கள், சக்கரங்கள் ஆகியவற்றை தயாரிக்கும் ரெயில்வேயின் தனித்தனி உற்பத்தி நிறுவனங்களை கார்ப்பரேட் நிறுவனமாக மாற்றி, இந்திய ரெயில்வே பெட்டிகள் நிறுவனம் என்று பெயர் மாற்றம் செய்யப்படும். இதற்காக தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டுள்ளதாகவும், 100 நாட்களுக்குள் ஒரு உற்பத்தி நிறுவனமாவது மாற்றப்படும். கேட்கீப்பர்களை கொண்டு திறந்து மூடப்படும் ரெயில்வே கேட்டுகள் அனைத்தையும் மூட வேண்டும். அதற்கு பதிலாக ரெயில்வே மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் ஆகியன அமைக்க வேண்டும். இதற்கு தங்கநாற்கர திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த மாநில அரசுகளிடம் இருந்து இனிமேல் நிதி பெறத்தேவையில்லை. இதற்காக 4 வருடங்களுக்குள் ரூ.50 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கும்.

இந்திய ரெயில்வே அதிகாரிகள் கட்டமைப்பை அனைத்து தரப்பிலும் முழுவதுமாக மாற்றியமைப்பதற்கான வரைவு அறிக்கை தயாரித்தல். இதில் கோட்ட மேலாளர், மண்டல மேலாளர் ஆகியோர் திறமையின் அடிப்படையில் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரெயில்வே துறையை முற்றிலும் கம்ப்யூட்டர் மயமாக்குவதற்கான அடிப்படை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மதுரை கோட்ட ரெயில்வேயை பொறுத்தமட்டில், ரெயில்களை தனியாருக்கு கொடுக்கும் திட்டத்துக்கு பெரும்பாலான அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ரெயில்களை தனியாருக்கு கொடுப்பது பல்வேறு விதங்களில் பயணிகளை கடுமையாக பாதிக்கும் என்பது இவர்களின் கருத்தாகும்.

Next Story