நாட்டாணிக்கோட்டை, குருவிக்கரம்பையில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம்


நாட்டாணிக்கோட்டை, குருவிக்கரம்பையில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம்
x
தினத்தந்தி 21 Jun 2019 10:15 PM GMT (Updated: 21 Jun 2019 7:42 PM GMT)

நாட்டாணிக்கோட்டை, குருவிக்கரம்பையில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தை காணொலிக்காட்சி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

பேராவூரணி,

பேராவூரணி வட்டம் நாட்டாணிக்கோட்டை மற்றும் சேதுபாவாசத்திரம் வட்டம் குருவிக்கரம்பை ஆகிய இடங்களில் ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் கட்டப்பட்டுள்ளது. இங்கு வேளாண் இடு பொருட்கள் கிட்டங்கி, வேளாண் விற்பனை துறை, தோட்டக்கலை துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் துறை, விதைச்சான்று துறை உள்ளிட்ட அனைத்து பிரிவு அலுவலகங்களும் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

இதனால் விவசாயிகள் தங்களுடைய ஒவ்வொரு தேவைக்காகவும், வெவ்வேறு இடங்களுக்கு அலைய வேண்டியதில்லை. அனைத்து பணிகளையும் ஒரே இடத்தில் முடித்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டாணிக்கோட்டை, குருவிக்கரம்பை ஆகிய இடங்களில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த மையங்களை சென்னை தலைமை செயலகத்தில் இருந்தப்படி காணொலிக்காட்சி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

இதை தொடர்ந்து பேராவூரணி மற்றும் குருவிக்கரம்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவிந்தராசு எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. திருஞானசம்பந்தம், ஒன்றிய செயலாளர்கள் துரைமாணிக்கம், மதிவாணன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். பின்னர் விரிவாக்க மையத்தில் மரக்கன்றுகளை கோவிந்தராசு எம்.எல்.ஏ. நட்டு வைத்தார்.

இதில் வேளாண்மை அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள், அட்மா திட்ட அலுவலர்கள், வேளாண் துறை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக வேளாண் உதவி இயக்குனர் மாலதி (பேராவூரணி), சையது இப்ராஹிம் (சேதுபாவாசத்திரம்) ஆகியோர் வரவேற்றனர்.

Next Story