சித்தா படிப்பிற்கு நீட்டில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை அமைச்சர் பேட்டி


சித்தா படிப்பிற்கு நீட்டில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை அமைச்சர் பேட்டி
x
தினத்தந்தி 22 Jun 2019 11:00 PM GMT (Updated: 22 Jun 2019 6:40 PM GMT)

சித்தா படிப்பிற்கு நீட்டில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

புதுக்கோட்டை,

தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் பொது மக்களின் மின் தொடர்பான குறைகளை உடனுக்குடன் சரி செய்யும் பொருட்டு 24 மணிநேரமும் இயங்கும் மின்தடை குறைதீர்க்கும் சேவை மையம் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோரின் மின்தடை குறித்த குறைகளை உடனுக்குடன் சரி செய்ய ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் புதுக்கோட்டை மின்சார வாரிய அலுவலகத்தில் அமைக்கப்பட்டு உள்ள புதிய கணினி மயமாக்கப்பட்ட மின்தடை புகார் பதிவு மைய திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

விழாவிற்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார். இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு புதிய கணினி மயமாக்கப்பட்ட மின்தடை புகார் பதிவு மையத்தை திறந்து வைத்து பேசினார். இதில் தமிழ்நாடு மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் செந்தில்குமார், செயற்பொறியாளர் மயில்வாகணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட அம்மா காப்பீடு திட்ட வார்டினை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். இந்த வார்டில் மேம்படுத்தப்பட்ட 30 படுக்கைகள் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு உள்ளது. அரசு மருத்துவமனைகளுக்கு முன்மாதிரியாக இங்கு திறக்கப்பட்டு உள்ள அம்மா காப்பீடு திட்ட புதிய வார்டில் நோயாளிகளின் அருகில் உடன் வந்தவர்கள் இருந்து பார்த்துக்கொள்வதற்கு வசதியாக மடித்து வைக்கும் வகையில் இருக்கைகள் மற்றும் நோயாளிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் மெல்லிய இசைகள் ஒலிக்கும் வகையில் 4 எல்.இ.டி. டி.வி.கள் உள்ளே பொறுத்தப்பட்டு உள்ளது. இதில் மருத்துவக் கல்லூரி டீன் மீனாட்சிசுந்தரம் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த ஆண்டு சித்தா படிப்பிற்கு நீட்டில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதுவரை எந்த பதிலும் பெறப்படவில்லை. சித்தா படிப்பிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது என்பது சவாலாக உள்ளது. தமிழக அரசின் அம்மா காப்பீட்டு திட்டத்தின் கீழ், தமிழக அரசு இதுவரை ரூ.5 ஆயிரத்து 900 கோடி செலவு செய்து உள்ளது.

அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் கட்டமைப்பு வசதிகள் தனியார் மருத்துவமனைக்கு நிகராக இருப்பதால் மருத்துவ சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள் எண்ணிக்கை அரசு மருத்துவமனைக்கு அதிகரித்து உள்ளது. கேரளா எல்லை மாவட்டங்களில், தமிழக அரசு மிக கவனமாக கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், தமிழகத்தில் நிபா வைரஸ் இதுவரை யாருக்கும் வரவில்லை.

பீகார் மாநிலத்திலிருந்து தமிழகத்தில் அதிக அளவு பேர் பணியாற்றுவதற்கு வந்தாலும் மூளை காய்ச்சல் என்பது பரவுவதற்கு வாய்ப்பில்லை. ஏனென்றால் அது தொற்று நோய் கிடையாது. சுற்றுச்சூழல் என்பதே தமிழகத்தில் நன்றாக பராமரிக்கப்படுவதால், மூளை காய்ச்சல் தமிழகத்தில் பரவுவதற்கு வாய்ப்பில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story