ஈரோட்டில் சிறுமி பாலியல் பலாத்காரம்: செல்போன் மெக்கானிக் போக்சோ சட்டத்தில் கைது
ஈரோட்டில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த செல்போன் மெக்கானிக் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு,
ஈரோடு பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 34). செல்போன் மெக்கானிக். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். ஈரோட்டை சேர்ந்த 17 வயது சிறுமி ரமேசின் மனைவியிடம் பேசுவதற்காக அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றார். அப்போது அந்த சிறுமி ரமேசுக்கும் பழக்கம் ஆனார். இதனால் அந்த சிறுமி ரமேசிடம் சகஜமாக பேசி பழகி வந்தார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரமேஷ் அந்த சிறுமியை வீட்டுக்கு வரவழைத்து பலமுறை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக அந்த சிறுமி கர்ப்பமானார். இதற்கிடையே கடந்த 2018–ம் ஆண்டு அந்த சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இதுகுறித்து சிறுமியின் தாய் ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார், ரமேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
தன்னை போலீசார் தேடுவதை அறிந்த அவர் தலைமறைவானார். இந்த நிலையில் ஈரோடு மாநகர் பகுதியில் அவர் சுற்றித்திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு, நேற்று காலை ரமேசை கைது செய்தனர்.