கூட்டுறவு சங்க தேர்தலில் பரபரப்பு: ஓட்டு பெட்டிகள், வாக்குச்சீட்டுகளை தூக்கிக்கொண்டு ஓடிய கும்பல் தி.மு.க.வினர் சாலை மறியல்


கூட்டுறவு சங்க தேர்தலில் பரபரப்பு: ஓட்டு பெட்டிகள், வாக்குச்சீட்டுகளை தூக்கிக்கொண்டு ஓடிய கும்பல் தி.மு.க.வினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 22 Jun 2019 11:00 PM GMT (Updated: 22 Jun 2019 7:41 PM GMT)

தஞ்சையில், கூட்டுறவு சங்க தேர்தலில் ஓட்டு பெட்டிகள், வாக்குச்சீட்டுகளை ஒரு கும்பல் தூக்கிக்கொண்டு ஓடியதால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு அ.தி.மு.க. தான் காரணம் என கூறி தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை கரந்தையில்,கருந்தட்டாங்குடி திராவிட கூட்டுறவு நகர வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் 11 இயக்குனர்களை தேர்வு செய்ய கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வேட்புமனு தாக்கல் நடந்தது. இதில் 2 பேர் பேட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள 9 இயக்குனர்களை தேர்வு செய்ய தேர்தல் நடைபெறாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவுபடி கரந்தையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. புதிதாக வேட்புமனு தாக்கல் பெறப்பட்டு தேர்தல் நடத்த வேண்டும் என தி.மு.க.வினர் வலியுறுத்தினர். ஆனால் அதிகாரிகள் அதை கேட்காமல், ஏற்கனவே தாக்கல் செய்த வேட்புமனுக்களின் அடிப்படையில் தேர்தல் நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருந்தனர்.

9 இயக்குனர் பணியிடத்திற்கு அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 29 பேர் போட்டியிட்டனர். தேர்தலில் வாக்களிக்க வங்கி உறுப்பினர்களும் ஆர்வத்துடன் நேற்று காலை வரத் தொடங்கினர். இந்த நிலையில் தேர்தலுக்காக மாநகராட்சி பள்ளியில் வைக்கப்பட்டு இருந்த வாக்குச்சீட்டுகள், வாக்காளர் பட்டியல், பெட்டிகளை சிலர் தூக்கி கொண்டு சென்றனர். இதை பார்த்த தி.மு.க., அ.ம.மு.க. உள்ளிட்ட பிற கட்சியினர் அவர்களை விரட்டி சென்றனர். ஆனால் அதற்குள் வாக்குச்சீட்டுகளுடன் அந்த நபர்கள் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச்சென்று விட்டனர்.

இதையடுத்து தி.மு.க. உள்ளிட்ட பிற கட்சியினர் மாநகராட்சி பள்ளிக்கு சென்று தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் வாக்குச்சீட்டுகள் இல்லாததால் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக கூட்டுறவு சங்க அதிகாரிகள் அறிவித்ததுடன் நோட்டீசு ஒட்டப்பட்டது.

தேர்தலை திட்டமிட்டு நிறுத்த வேண்டும் என்பதற்காகவே அ.தி.மு.க.வினர் தான் வாக்குச்சீட்டுகள், வாக்காளர் பட்டியல், பெட்டிகளை தூக்கி சென்று இருப்பதாக கூறி கரந்தை பஸ் நிறுத்தம் முன்பு தி.மு.க.வினர், நீலமேகம் எம்.எல்.ஏ. தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது வாக்குச்சீட்டுகளை தூக்கி சென்றவர்களை கைது செய்வதாக போலீசார் கூறியதை தொடர்ந்து தி.மு.க.வினர் மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து நீலமேகம் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறும்போது, ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்றால் தி.மு.க. வெற்றி பெறும். இதனால் அ.தி.மு.க.வினர் அதிகாரிகள், போலீசாரின் துணையோடு தேர்தலை திட்டமிட்டு நிறுத்தி இருப்பது ஜனநாயகத்தை கேலிகூத்தாக்குவதற்கு சமம்.

தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யக்கூட அ.தி.மு.க.வினரிடம் நிர்வாகிகள் இல்லை. வெற்றி பெற முடியாது என்ற காரணத்தினால் திட்டமிட்டபடி தேர்தலை நிறுத்தியுள்ளனர். இந்த தேர்தலை ஜனநாயக முறைப்படி உடனடியாக நடத்த வேண்டும் என்றார்.

Next Story