மானாமதுரையில் பரபரப்பு: கத்திக்குத்து காயங்களுடன் வீட்டில் பிணமாக கிடந்த போலீஸ்காரர், தற்கொலையா- கொலையா? தீவிர விசாரணை


மானாமதுரையில் பரபரப்பு: கத்திக்குத்து காயங்களுடன் வீட்டில் பிணமாக கிடந்த போலீஸ்காரர், தற்கொலையா- கொலையா? தீவிர விசாரணை
x
தினத்தந்தி 23 Jun 2019 12:00 AM GMT (Updated: 22 Jun 2019 9:23 PM GMT)

தனது வீட்டில் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் போலீஸ்காரர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் தன்னைத் தானே கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மானாமதுரை,

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தசுகுமாறன் மகன் மணிகண்டபிரபு (வயது 31). இவர் மதுரையில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். அவருடைய மனைவி திருமலாதேவி (29). இவர் மானாமதுரையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2½ வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. மணிகண்டபிரபு கடந்த 2011-ம் ஆண்டு ஆயுதப்படையில் பணிக்கு சேர்ந்தார். நேற்று மணிகண்ட பிரபு வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை பள்ளிக்கூடம் முடிந்து அவருடைய மனைவி வீட்டுக்கு வந்தார்.

வீட்டின் கதவை திருமலா தேவி திறந்து பார்த்த போது அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மணிகண்ட பிரபு நெஞ்சில் கத்திக்குத்து காயத்துடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

இதைப்பார்த்ததும் அவர் பதறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்து அலறினார். அந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வீட்டு்க்குள் சென்று மணிகண்டபிரபு இறந்து கிடந்ததை பார்த்து மானாமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் போலீஸ்காரர் மணிகண்டபிரபுவின் உடலை கைப்பற்றி மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவத்துக்கான பின்னணி என்ன என்பதை அறிய திருமலாதேவியிடம் போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கினர்.

மணிகண்டபிரபு பணிச்சுமை காரணமாக தன்னைத் தானே கத்தியால் குத்தி தற்கொைல செய்து கொண்டதாக முதலில் சந்தேகிக்கப்பட்டது. அதே நேரத்தில் அவர் மர்ம மனிதனால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனவும் தகவல் பரவியது.

எனவே இந்த சம்பவத்தில் துப்புதுலங்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் அவருடன் பணியாற்றிவந்த போலீஸ்காரர்கள், அதிகாரிகளிடமும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. குடும்ப பிரச்சினையால் மணிகண்டபிரபுவுக்கு நெருக்கடி ஏதும் இருந்ததா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

போலீஸ்காரர் தனது வீட்டில் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story