செவிலியர், மருந்து ஆய்வாளர்கள் பணிக்கான எழுத்து தேர்வு: திருச்சியில் 9,156 பேர் எழுதினார்கள்


செவிலியர், மருந்து ஆய்வாளர்கள் பணிக்கான எழுத்து தேர்வு: திருச்சியில் 9,156 பேர் எழுதினார்கள்
x
தினத்தந்தி 23 Jun 2019 10:45 PM GMT (Updated: 23 Jun 2019 7:20 PM GMT)

செவிலியர் மற்றும் மருந்து ஆய்வாளர்கள் பணிக்கான எழுத்து தேர்வை திருச்சியில் 9,156 பேர் எழுதினார்கள்.

திருச்சி,

தமிழ்நாடு மருத்துவ கல்வி வாரியம் சார்பில் செவிலியர் பணிக்கான எழுத்து தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது. திருச்சியில் பெரியார் ஈ.வெ.ரா. அரசு கல்லூரி, சாரநாதன் பொறியியல் கல்லூரி, இ.ஆர். மேல்நிலைப்பள்ளி, ஜான் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி, காவேரி மெட்ரிக் பள்ளி உள்பட 14 இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த தேர்வினை எழுத திருச்சி மாவட்டத்தில் 9,807 பேர் விண்ணப்பம் செய்து இருந்தனர். இவர்களில் 9,156 பேர் தேர்வு எழுதினார்கள். 651 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கைக்குழந்தைகளுடன் தேர்வு எழுதிய பெண்களின் கணவன் மற்றும் உறவினர்கள் தேர்வு மையத்திற்கு வெளியில் குழந்தையுடன் காத்து இருந்தனர்.

மருந்து ஆய்வாளர்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் மருந்து ஆய்வாளர்கள் மற்றும் இளநிலை பகுப்பாய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வு நேற்று திருச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களில் நடந்தது. மொத்தம் விண்ணப்பம் செய்திருந்த 384 பேரில் 281 பேர் தேர்வு எழுதினர். 103 பேர் தேர்வு எழுத வரவில்லை. திருச்சி வெஸ்ட்ரி பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்திற்கு திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Next Story