வருகிற 28-ந் தேதி நடக்கும் கிராமசபை கூட்டங்களில் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் பி.ஆர்.பாண்டியன் பேட்டி


வருகிற 28-ந் தேதி நடக்கும் கிராமசபை கூட்டங்களில் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் பி.ஆர்.பாண்டியன் பேட்டி
x
தினத்தந்தி 23 Jun 2019 11:00 PM GMT (Updated: 23 Jun 2019 7:43 PM GMT)

வருகிற 28-ந் தேதி நடக்கும் கிராமசபை கூட்டங்களில் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தஞ்சையில் பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

தஞ்சாவூர்,

காவிரி டெல்டா மாவட்டங்களில் 8 ஆண்டுகளாக குறுவை சாகுபடி நடைபெறவில்லை. இந்த 8 ஆண்டுகளும் அ.தி.மு.க. தான் ஆட்சியில் உள்ளது. குளம், ஏரி, வாய்க்கால் உள்ளிட்ட பாசன வசதிகள் முறையாக சீரமைக்கப்படவில்லை. இதனால் சாகுபடி நடைபெறாததுடன், கடும் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் சராசரியாக 90 டி.எம்.சி. உபரிநீர் வங்ககடலில் கலக்கிறது. உபரிநீரை தடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான ராசிமணலில் அணைகட்டி பயன்படுத்த தமிழகஅரசுக்கு அனுமதி வழங்க வேண்டும். ராசிமணலில் அணை கட்ட தமிழகத்திற்கு உரிமை உள்ளது. இந்த அணை கட்டும் பிரச்சினையை வைத்து அரசியல் செய்யக்கூடாது.

ராசிமணலில் அணை கட்டுவதற்கான தீர்மானத்தை நாளை(25-ந் தேதி) நடைபெற உள்ள காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் நிறைவேற்ற வலியுறுத்தி இன்று(திங்கட்கிழமை) மாலை டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத்உசேனை நேரில் சந்தித்து பேச இருக்கிறேன்.

ஹைட்ரோகார்பன் எரிவாயு திட்டத்தை கைவிட வலியுறுத்தி பிரதமர் மோடியின் அலுவலகத்தில் விரிவான விளக்க கடிதம் நேரில் வழங்க இருக்கிறேன். டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி வருகிற 28-ந் தேதி நடைபெற உள்ள கிராமசபை கூட்டங்களில தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைக்க விவசாயிகளும், அனைத்து அரசியல் கட்சியினரும் முன்வர வேண்டும்.

டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். ராசிமணலில் அணை கட்ட அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அடுத்தமாதம்(ஜூலை) 25-ந் தேதி டெல்லியில் உண்ணாவிரத போராட்டமும், அதற்கு மறுநாள்(26-ந் தேதி) பாராளுமன்ற முற்றுகை போராட்டமும் நடைபெற உள்ளது.

சென்னை குடிநீர் பிரச்சினையை கிருஷ்ணா நதி நீரால் முழுமையாக போக்க முடியவில்லை. காவிரி நீரை வீராணம் ஏரிக்கு கொண்டு சென்று அங்கிருந்து சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு குடிநீர் பிரச்சினை தீர்க்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story