வீடுகள், மற்றும் வணிக வளாகங்களில் மழை நீர் சேமிப்பு தொட்டி அமைக்க வேண்டும்; கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் வேண்டுகோள்


வீடுகள், மற்றும் வணிக வளாகங்களில் மழை நீர் சேமிப்பு தொட்டி  அமைக்க வேண்டும்; கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 23 Jun 2019 11:10 PM GMT (Updated: 23 Jun 2019 11:10 PM GMT)

வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் மழைநீர் சேமிப்பு தொட்டி அமைத்திட வேண்டும் என கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பாகூர்,

பாகூர் கொம்யூன் பஞ்சாயத்திற்குட்பட்ட 15 கிராம பஞ்சாயத்துகளிலும், மழை நீர், நீர்நிலை சேமிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து ஆலோசிப்பதற்கான சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து பொறுப்பு அதிகாரிகள் கலந்து கொண்டு பொது மக்களிடம் கருத்துக்களையும், ஆலோசனைகளை கேட்டறிந்தனர்.

பாகூரில் நடந்த கூட்டத்தில், குப்பை, தெருமின் விளக்கு, சாலை, கழிவு நீர் வாய்கால் பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் பொது மக்கள் சரமாரியாக கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சேலியமேடு, குடியிருப்புபாளையத்தில் நடந்த கூட்டத்தில், குடிநீர் பற்றாக்குறை இருக்கும் நிலையில், புதியதாக அமைக்கப்பட்ட போர்வெல்லை பயன்பாட்டிற்கு கொண்டு வராதது ஏன்,அதனை உடனே பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

கன்னியக்கோவிலில் நடந்த கூட்டத்தில், மணப்பட்டு கிராமத்தில் உள்ள 15க்கும் மேற்பட்ட குளங்களையும், கன்னியக்கோவிலில் உள்ள 3 முக்கிய குளங்களையும் தூர்வாரி மழை நீரை சேமித்திட வேண்டும். குடிநீர் பற்றாக்குறையை போக்கிடும் வகையில் மணப்பட்டு கிராமத்தில் புதிதாக பைப் லைன் அமைக்க வேண்டும் என்றனர்.

கிருமாம்பாக்கத்தில் நடந்த கூட்டத்தில், ஒவ்வொரு வீட்டிலேயும் மழைநீர் சேமிப்பு தொட்டி, அமைக்க அரசு மானியம் அளித்திட வேண்டும். இல்லையெனில், அந்த சேமிப்பு அமைப்புகளை அரசே கட்டி கொடுத்திட வேண்டும்.

கிருமாம்பாக்கத்தில் உள்ள குளங்களில் உள்ள நீரை பயன்படுத்திடும் வகையில், அதனை பாதுகாத்திட வேண்டும். காய், கனிகளை தரக்கூடிய மரங்களை அரசு வீடு வீடாக வழங்கிட வேண்டும். இடம் இல்லாத மக்களுக்கு, பொது இடத்தில் நட்டு வளர்த்து அதன் பயனை பெற்றிட அரசு அனுமதி வழங்கிட வேண்டும் என்றனர்.

இதேபோல், மற்ற கிராமங்களில் நடைபெற்ற கூட்டத்திலும், பல்வேறு ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டது.

மூ.புதுக்குப்பம் கிராத்தில், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சவுந்திரராஜன் தலைமையில், மழை நீரை சேமித்திடும் வகையில், மூத்தோர் குளத்தை, மூ.புதுக்குப்பம் கிராம மக்கள், மக்கள் நாடி இயக்கம், பூவுலகின் நண்பர்கள், தன்னார்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் கொம்யூன் பஞ்சாயத்தாருடன் இணைந்து, குளத்தில் இருந்த ஆகாயத்தாமரை செடிகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, பாகூர் படப்பன் குளம், சேலியமேடு, கன்னியக்கோவில், மணமேடு, கிருமாம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

இது குறித்து கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சவுந்திரராஜன் கூறுகையில்‘‘ சிறப்பு கிராம சபை கூட்டங்களின் மூலமாக பொது மக்களிடம் மழை நீர் சேமிப்பு குறித்து கருத்துகள் பெறப்பட்டது. அதனடிப்படையில், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்திடும் வகையில் வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் மழை நீர் சேமிப்பு தொட்டி அமைத்திட வேண்டும்.

ஏரி, குளம், குட்டைகளை தூர்வாரி மழை நீரை சேமிப்பது, மழை நீர் சேமிப்பு, நீர் நிலை பாதுகாப்பு குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் இணைத்து விழிப்புணர்வு ஊர்வலம் நடத்துவது, பள்ளி கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மழை நீர் சேமிப்பு குறித்த கட்டுரை, பேச்சு, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடத்துவது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது

இவ்வாறு அவர் கூறினார்.

அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களில் “நீர் ஆதாரம் மற்றும் நீர் நிலைகளை பாதுகாத்தல்“ குறித்து சிறப்பு கிராம சபை கூட்டங்கள் 11 கிராம பஞ்சாயத்துக்களில் நேற்று நடந்தது. இதில் காக்காயந்தோப்பு கிராம பஞ்சாயத்து சார்பில் ராதாகிருஷ்ணன் நகர் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் நடந்தது.

இந்த கூட்டத்திற்கு கொம்யூன் பஞ்சாயத்து மேலாளர் ரவி தலைமை தாங்கினார். செயலாக்க அதிகாரி வளர்மதி வரவேற்றார், முடிவில் சிவராமன் நன்றி கூறினார். கூட்டத்தில் நீர் நிலைகளை பாதுகாப்பது குறித்தும் குடிநீர் சிக்கனம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து காக்காயந்தோப்பு செட்டிக்குளத்தினை சுத்தம் செய்வது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இந்த கூட்டங்களில் கிராம பொதுமக்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், கிராம வளர்ச்சி சங்க உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story