மாரியம்மன் கோவிலில் சாமி நகை, பணம் கொள்ளை பீரோ, உண்டியலை உடைத்து மர்மகும்பல் கைவரிசை


மாரியம்மன் கோவிலில் சாமி நகை, பணம் கொள்ளை பீரோ, உண்டியலை உடைத்து மர்மகும்பல் கைவரிசை
x
தினத்தந்தி 24 Jun 2019 11:00 PM GMT (Updated: 24 Jun 2019 5:47 PM GMT)

ராசிபுரம் அருகே மாரியம்மன் கோவிலில் பீரோ, உண்டியலை உடைத்து மர்ம கும்பல் கைவரிசை காட்டியது. அங்கு இருந்த சாமி நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றது.

ராசிபுரம்,

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சந்திரசேகரபுரம் கரட்டுப்பட்டி அருந்ததியர் தெருவுக்கு சொந்தமான பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் ஊரின் அருகில் காட்டுப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு கும்பா பிஷேகம் நடந்தது.

அம்மன் கோவிலின் பின்புறம் மதுரைவீரன் கோவில் உள்ளது. கோவிலுக்கு அந்த கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்துவிட்டுச் செல்வார்கள். இந்த கோவிலில் உள்ள அம்மனுக்கு தினந்தோறும் பகலில் பூசாரி காசிராஜன் (வயது 48) பூஜை செய்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டுச் சென்றுவிடுவது வழக்கம். மறுநாள் காலையில் பட்டப்பூசாரி பழனி (52) என்பவர் கோவிலுக்கு வந்து மின் விளக்கை அணைத்துவிட்டுச் செல்வார்.

வழக்கம்போல் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு பூசாரி காசிராஜன் பூஜையை முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டுச் சென்றுள்ளார்.

நேற்று காலை 6 மணியளவில் பட்டப்பூசாரி பழனி கோவிலில் எரிந்து கொண்டிருந்த மின்விளக்கை அணைப்பதற்காக வந்தார். அப்போது கோவில் கிரில் கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலையில் கிடந்ததை கண்டார்.

உள்ளே சென்று பார்த்தபோது கோவிலின் உள்புறத்தில் நந்தி சிலை அருகே வைக்கப்பட்டிருந்த சில்வரால் ஆன உண்டியலை கொள்ளையர்கள் தூக்கிச் சென்று கோவின் முன்புறம் உள்ள மேட்டுப் பகுதியில் வைத்து உடைத்து இருந்ததை கண்டு திடுக்கிட்டார். அதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்த சுமார் ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்து விட்டு உண்டியலை காட்டுப்பகுதியில் போட்டுவிட்டுச் சென்று இருந்ததும் தெரியவந்தது.

இந்த உண்டியல் கடந்த 4 வருடங்களாக திறக்கப்படவில்லை என்று பூசாரிகள் தெரிவித்தனர்.

மேலும் கோவிலுக்குள் வைக்கப்பட்டிருந்த இரும்பு பீரோவையும் கொள்ளையர்கள் உடைத்துள்ளனர். லாக்கரில் வைக்கப்பட்டிருந்த சாமிக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்த 3 தங்க மூக்குத்திகளையும், சாமிக்கு அணிவிக்கப்பட்டிருந்த 2 தாலிகள், 5 பவுன் தங்க காசுகள் ஆகியவற்றை கொள்ளையடித்து உள்ளனர். மொத்தம் 10 பவுன் தங்க நகைகள், பக்தர்கள் செலுத்தி இருந்த 50-க்கும் மேற்பட்ட பட்டுச் சேலைகளும் கொள்ளை போனது.

கருவறைக்குள் வைக்கப்பட்டிருந்த ஐம்பொன்னால் ஆன அம்மன் சிலையை கொள்ளை அடிக்க முயற்சித்துள்ளனர். ஆனால் முடியாததால் அந்த சிலை தப்பியது. கோவிலில் சாமிக்கு படைக்கப்பட்ட செவ்வாழை பழங்களை வெளியே எடுத்து வந்து சிறிது சாப்பிட்டு உள்ளனர்.

கோவிலுக்கு வந்த கொள்ளையர்கள் அம்மன் கோவில் வெளிப்புறம் ஊஞ்சல் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேலை எடுத்துதான் கோவிலின் கிரில் கேட் பூட்டை உடைத்துள்ளனர். இரும்பு பீரோவையும் உடைத்துள்ளனர். மேலும் மதுரைவீரன் கோவிலின் முன்பு இருந்த 2 வேல்களையும் எடுத்து வந்துள்ளனர். மொத்தம் 3 வேல்களை கொள்ளைக்கு பயன்படுத்திவிட்டு கோவிலின் வடபுறம் சுவற்றில் நிறுத்திவைத்துவிட்டுச் சென்றுள்ளனர். முன்னதாக மதுரைவீரன் கோவிலில் இருந்த மின் விளக்கு சுவிட்ச் பாக்சை முதலில் உடைத்து மின்சாரத்தை துண்டித்து விட்டு மர்ம கும்பல் கைவரிசை காட்டியுள்ளனர்.

இந்த துணிகர சம்பவம் பற்றி ராசிபுரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தார். மோப்ப நாயும் வரவழைக்கப்படுகிறது. ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார்.

கோவிலில் நடந்த கொள்ளை சம்பவத்தை பற்றி கேள்விப்பட்டதும் அந்த கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story