டாஸ்மாக் கடைகள் அமைக்க எதிர்ப்பு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு


டாஸ்மாக் கடைகள் அமைக்க எதிர்ப்பு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 24 Jun 2019 10:45 PM GMT (Updated: 24 Jun 2019 8:15 PM GMT)

ஆவணத்தான்கோட்டை, ராங்கியன்விடுதியில் டாஸ்மாக் கடைகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டார். கூட்டத்தில் விலையில்லா வீட்டுமனைப்பட்டா, குடிநீர் வசதி, சாலை வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 536 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

டாஸ்மாக் கடைகள் திறக்க எதிர்ப்பு

கூட்டத்தில் அறந்தாங்கியை அடுத்த ஆவணத்தான்கோட்டை இளைய மகாத்மா இளைஞர் மன்றம், மகளிர் சுயஉதவிக்குழு சார்பில் பெண்கள் கொடுத்த மனுவில், ஆவணத்தான்கோட்டையில் டாஸ்மாக் கடை திறப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்து உள்ளது. கடை அமைப்பதற்காக முயற்சி மேற்கொள்ளப்படும் இடத்தில் பள்ளிகள், கோவில்கள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளன.

இதனால் நாங்கள் எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவிக்கிறோம். எனவே மாவட்ட நிர்வாகம் ஆவணத்தான்கோட்டையில் டாஸ்மாக் கடை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என கூறியிருந்தனர். இதேபோல கறம்பக்குடி தாலுகா ராங்கியன்விடுதியிலும் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர்.

ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்

கூட்டத்தில் தமிழ்நாடு ஓவியர்கள் சங்கம் சார்பில் கொடுத்த மனுவில், தமிழ்நாடு ஓவியர்கள் சங்கம் மற்றும் ஓவியர்கள் கூட்டுறவு சங்கம் என்ற அமைப்பின் பெயரில் புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 300 குடும்பங்களை சேர்ந்த ஆயிரம் ஓவியர்கள் உள்ளோம். பிளக்ஸ் பிரிண்டிங் மூலமாகவும், தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலமாகவும், அரசு சார்ந்த விளம்பர வேலைகளை ஓவியர் தொழில் அல்லாதவர்கள் செய்து வருகின்றனர். இதனால் ஓவியர்களாகிய நாங்கள் வருமானம் இல்லாமல் தவித்து வருகிறோம். எனவே மாவட்ட நிர்வாகம் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஓவியர்களுக்கு அரசு துறை சார்ந்த விளம்பர பணிகளை ஒதுக்கி எங்களது வாழ்வாதாரம் காக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

ராங்கியன்விடுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், ராங்கியன்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அதிகாரிகளுக்கு பலமுறை மனுஅளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே உடனடியாக நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இல்லையென்றால் வருகிற 1-ந் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என கூறியிருந்தனர்.

நெல்கொள்முதல் நிலையம்

ராங்கியன்விடுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மற்றொரு மனுவில், நெல் கொள்முதல் நிலையம் அமைப்பது தொடர்பாக மனு கொடுக்கப்பட்டதை தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் வந்து கடந்த 19-ந் தேதி விசாரணை நடத்தினார். அப்போது நீர்நிலை புறம்போக்கில் இடத்தில் குறுவை சாகுபடிக்கு தற்காலிகமாக நெல்கொள்முதல் நிலையம் அமைத்து கொள்வோம் என்றார்.

இதற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார் எதிர்ப்பு தெரிவித்தார். எனவே இந்த குறுவை சாகுபடிக்கு நெல்கொள்முதல் நிலையத்தை பொது இடத்தில் வைக்க உத்தரவிட வேண்டும். எனது வீட்டை தவிர வேறுஎந்த இடத்திலும் நெல்கொள்முதல் நிலையம் அமைக்கக்கூடாது என மனு செய்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

வீட்டுமனை பட்டாவிற்கு பணம் வசூல்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பிரமையா கொடுத்த மனுவில், லெணா விலக்கு அருகே அரசநாயகிபுரம் உள்ளது. இக்கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடு கட்டி 20 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். இப்பகுதியில் உள்ள இடைத்தரகர்கள் சிலர் வீட்டுமனை பட்டாவிற்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை வசூல் செய்து வருகின்றனர். இதுவரை 20 பேர் வீட்டுமனை பட்டாவிற்காக ரூ.20 லட்சம் வரை கொடுத்து உள்ளனர். எனவே அரசு நேரடியாக தலையிட்டு எங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

9 ஏ நத்தம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் 9ஏ நத்தம்பண்ணை ஊராட்சி மன்ற அலுவலகம் திருச்சி சாலையில் உள்ள ஐ.டி.ஐ. காலனியில் உள்ள கிராம சேவை மையத்தில் இயங்கி வருகிறது. இந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது. மேலும் புதிய கட்டிடம் கட்டும்வரை இதே கட்டிடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

ஐம்பொன் சிலைகள் திருட்டு

புதுக்கோட்டை உடையநெரி காலனி பொதுமக்கள் சார்பில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க ஒன்றிய செயலாளர் சுபாஷினி கொடுத்த மனுவில், உடையநெரி காலனி பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். இப்பகுதி இலங்கை பகுதி மக்களுக்காக ஒதுக்கப்பட்டது. இந்த பகுதியில் உள்ளவர்களுக்கு குடிநீர், தெருவிளக்கு, சாலை, கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என கூறியிருந்தனர்.

ஆவுடையார்கோவில் தாலுகா பனைவயலை சேர்ந்த ரவி குருக்கள் கொடுத்த மனுவில், நான் பனையவல் பகுதியில் உள்ள வெள்ளாற்று பாலம் அருகே சரபேஸ்வரர் பெயரில் கோவில் அமைத்து உள்ளேன். இங்கு ஐம்பொன்னால் ஆன சரபேஸ்வரர், பிரத்தியங்கரா, தெட்சணை காளி ஆகிய 3 ஐம்பொன் சிலைகளை வைத்து பூஜைகள் செய்து வருகிறேன்.

இந்நிலையில் கடந்த 21-ந் தேதி இரவு கோவிலின் உள்ள பித்தளை பொருட்கள், 3 ஐம்பொன் சிலைகள் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இது குறித்து ஆவுடையார்கோவில் போலீசில் புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ஐம்பொன் சிலைகள் உள்ளிட்ட பித்தளை பொருட்களை மீட்டு தர வேண்டும் என கூறியிருந்தனர்.

டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது

கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், மேற்பனைக்காடு ஊராட்சியில் கிழக்கு பகுதியில் இருந்த டாஸ்மாக் கடை பொதுமக்கள் போராட்டத்தை தொடர்ந்து மூடப்பட்டது. இந்நிலையில் அதே பகுதியில் மீண்டும் டாஸ்மாக் கடை திறப்பதற்கான முயற்சிகள் நடப்பதாக எங்களுக்கு தெரியவந்து உள்ளது. பள்ளிக்கூடம், கோவில் அருகில் மீண்டும் டாஸ்மாக் கடை திறக்க கூடாது. எனவே பொதுமக்கள் போராட்டத்தால் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க அனுமதி அளிக்க கூடாது. அதையும் மீறி கடை திறக்க முயன்றால் போராட்டம் நடத்துவோம். 

Next Story