ஒரே நாளில் ரெயில் மோதி 4 பேர் சாவு போலீஸ் விசாரணை


ஒரே நாளில் ரெயில் மோதி 4 பேர் சாவு போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 24 Jun 2019 10:15 PM GMT (Updated: 24 Jun 2019 8:46 PM GMT)

குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் வெவ்வேறு சம்பவங்களில் ஒரே நாளில் ரெயில் மோதி 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் ரெயில்கள் மூலமாக ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். எனினும் கவனக்குறைவாக தண்டவாளத்தை கடக்கும்போது ரெயில் மோதி மக்கள் இறக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இந்த நிலையில் குமரி மற்றும் நெல்லை மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் ரெயில் மோதி 4 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

எலக்ட்ரீசியன்

சாமிதோப்பு செட்டிவிளையை சேர்ந்தவர் கோகுல கண்ணன் (வயது 29), எலக்ட்ரீசியன். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் கோகுல கண்ணன் நேற்று அதே பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். இதை பார்த்த பொதுமக்கள் உடனே நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.

ரெயில் மோதி கண்ணன் இறந்துள்ளார். அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா?, தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நுள்ளிவிளை பாலம்

இதே போல நாகர்கோவிலுக்கும், இரணியலுக்கும் இடையே உள்ள நுள்ளிவிளை ரெயில்வே பாலத்தில் ஒரு வாலிபர் பிணம் கிடந்தது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் உடனே அங்கு விரைந்து சென்றனர். பின்னர் விசாரணை நடத்தியதில் பிணமாக கிடந்தவர் காரங்காடு தெற்கு தெருவை சேர்ந்த ஜெயின் பிரைட் (27) என்பதும், ரெயில்வே பாலத்தில் நடந்து சென்றபோது அந்த வழியாக வந்த ரெயில் மோதி அவர் இறந்ததும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து பிணத்தை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

பணகுடி

மேலும் நெல்லை மாவட்டம் பணகுடி சைதம்மாள்புரம் வடக்கு தெருவை சேர்ந்த பராசக்தி (30) என்பவர் ரெயில் மோதி பிணமாக கிடந்தார். தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்ற விவரம் சரியாக தெரியவில்லை. இவர் கோவையில் வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்தபோது இந்த பரிதாப சம்பவம் ஏற்பட்டு உள்ளது.

இதனையடுத்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.

நாங்குநேரி

இதுபோல நாங்குநேரிக்கும், செங்குளத்துக்கும் இடையே உள்ள நெடுங்குளம் ரெயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் வாலிபர் பிணம் கிடந்தது. அவருக்கு சுமார் 35 வயது இருக்கும். ஆனால் அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. அவர் கருப்பு மற்றும் வெள்ளை நிறம் கலந்த சட்டையும், கருப்பு நிற லுங்கியும் அணிந்திருந்தார்.

இதைத் தொடர்ந்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். பிணமாக கிடந்தவர் பையில் இருந்து செல்போனை கைப்பற்றியுள்ளனர். அந்த செல்போன் மூலமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் ரெயில் மோதி 4 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story