போலி ஆவணங்கள் தயாரித்து, கூட்டுறவு சங்கத்தில் ரூ.1 கோடி முறைகேடு - கலெக்டர் அலுவலகத்தில் புகார்


போலி ஆவணங்கள் தயாரித்து, கூட்டுறவு சங்கத்தில் ரூ.1 கோடி முறைகேடு - கலெக்டர் அலுவலகத்தில் புகார்
x
தினத்தந்தி 24 Jun 2019 10:30 PM GMT (Updated: 24 Jun 2019 9:45 PM GMT)

திண்டுக்கல் அருகே போலி ஆவணங்கள் தயாரித்து கூட்டுறவு சங்கத்தில் ரூ.1 கோடி முறைகேடு நடந்ததாக கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

திண்டுக்கல், 

திண்டுக்கல் அருகே உள்ள செங்குறிச்சி கூட்டுறவு கடன் சங்கத்தின் துணை தலைவர் நல்லுச்சாமி உள்பட சிலர், நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் கூட்டுறவு சங்கத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போலீசார் அங்கு வந்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் குற்றச்சாட்டு தொடர்பாக குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்கும்படி அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து குறைதீர்க்கும் கூட்டத்தில் துணை தலைவர் நல்லுச்சாமி மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

செங்குறிச்சி தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில், நான் துணை தலைவராக உள்ளேன். அரசு ஆவணங்களை போலியாக தயாரித்தும், வெளிநாட்டில் இருக்கும் நபருக்கு போலியாக கையெழுத்திட்டு கடன் வழங்கியும் சங்கத்தில் ரூ.1 கோடி முறைகேடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து நான் புகார் அளித்தேன். இதையடுத்து விசாரணை அதிகாரி நியமிக் கப்பட்டு, முறைகேடு செய்த பணத்தில் பல லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டது. அதன்பின்னர் விசாரணை முறையாக நடைபெறவில்லை. எனவே, முறையாக விசாரணை நடைபெறுவதற்கு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story