திருச்சி முக்கொம்பு மேலணையில் மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள் திடீர் ஆய்வு


திருச்சி முக்கொம்பு மேலணையில் மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 25 Jun 2019 11:00 PM GMT (Updated: 25 Jun 2019 7:25 PM GMT)

திருச்சி முக்கொம்பு மேலணையில் மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து நீர் அளவிடும் கருவிகளை பார்வையிட்டனர்.

ஜீயபுரம்,

மத்திய அரசின் நீர்வள ஆணையம் சார்பில் முக்கிய ஆறுகளில் நீர் அளவிடும் கருவிகள் அமைக்கப்பட்டு உள்ளன. மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கினால் உருவாகும் தண்ணீரை அளவிடுதல் மற்றும் நீர் திறந்து விடுவதை கண்காணிப்பதற்காக இந்த கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன.

திருச்சி முக்கொம்பு மேலணையில் பொருத்தப்பட்டுள்ள நீர் அளவிடும் கருவிகளை நேற்று மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்து பார்வையிட்டனர். இந்த ஆய்வு குழுவில் மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகளுடன் காவிரி நீரை பங்கிட்டு கொள்ளும் மாநிலங்களான கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து பொதுப்பணித்துறையின் கண்காணிப்பு பொறியாளர் மற்றும் செயற்பொறியாளர் நிலையிலான தலா 2 அதிகாரிகள் இடம் பெற்று உள்ளனர்.

முக்கொம்பில் நீர் அளவிடும் கருவிகளை ஆய்வு செய்த அதிகாரிகள் கொள்ளிடம் தடுப்பணையில் கடந்த ஆண்டு உடைப்பு ஏற்பட்ட பகுதி, அதன் அருகில் புதிதாக ரூ.385 கோடியில் கட்டப்பட்டு வரும் கதவணை ஆகியவற்றையும் பார்வையிட்டனர். அதன் பின்னர் முக்கொம்பு ஆய்வு மாளிகையில் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்கள்.

இதுதொடர்பாக பொதுப்பணித்துறையின் ஆற்று பாதுகாப்பு கோட்ட பொறியாளர் பாஸ்கர் கூறுகையில், ‘இது வழக்கமான ஆய்வு தான். திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை முசிறி, முக்கொம்பு ஆகிய இடங்களில் ஆய்வு நடந்து உள்ளது. அடுத்து இந்த குழுவினர் கல்லணையில் ஆய்வு செய்து விட்டு காரைக்கால் செல் கிறார்கள்’ என்றார்.

Next Story