ராமநாதபுரத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்


ராமநாதபுரத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 Jun 2019 11:30 PM GMT (Updated: 25 Jun 2019 8:53 PM GMT)

ராமநாதபுரத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக்கோரி முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தலைமையில் மார்க்சிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை போர்க்கால அடிப்படையில் போக்கிட வேண்டும், ராமநாதபுரத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ராமநாதபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் காசிநாத துரை தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சிவாஜி, முத்துராமு, கண்ணகி, ராஜ்குமார், மயில் வாகனன், செந்தில்வேல், கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதன்பின்னர் அவர் கூறியதாவது:–

ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது கடுமையான குடிநீர் பஞ்சம் நிலவி வருகிறது. மாவட்டத்தில் உள்ள 200–க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் வினியோகம் இன்றி மக்கள் தவித்து வருகிறார்கள். கிராமப்புறங்கள் மட்டுமின்றி நகர்ப்புறங்களிலும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த குடிநீர் பஞ்சத்தை சமாளிக்க தமிழக அரசு போதிய நடவடிக்கை எடுக்க வில்லை. மேலும் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை முறையாக பராமரிக்காததால் தனியார் குடிநீர் வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது. காவிரி குடிநீர் குழாய்களை சில சமூக விரோதிகள் மட்டுமல்லாது தனியார் தண்ணீர் லாரி விற்பனையாளர்களே சேதப்படுத்தி தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர்.

தனியார் குடிநீர் வாகனங்களில் அதிக விலைக்கு தண்ணீர் விற்பனை செய்யப்படுகிறது. இவர்களுக்கு இந்த அளவு தண்ணீருக்கு அதிக விலையை நிர்ணயித்தது யார்? தனியாருக்கு தண்ணீர் விற்பனைக்கு கிடைக்கும்போது அரசு நிர்வாகத்திற்கு கிடைக்காமல் போனது எப்படி? எனவே தனியார் வாகனங்களில் அரசு நிர்வாகம் மக்களுக்கு இலவசமாக தண்ணீர் வழங்க வேண்டும். தனியார் லாரி தண்ணீர் விற்பனையை முறைப்படுத்தி விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும்

மாவட்டத்தில் அதானி குழுமத்தினரால் நடத்தப்படும் மின் உற்பத்தி நிலையத்துக்கு மின் தகடுகளை கழுவுவதற்கு பல லட்சம் லிட்டர் தண்ணீர் உறிஞ்சப்பட்டு வருகிறது. இந்த தண்ணீரை தடுத்து நிறுத்தி அதனை மக்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும். தற்போது மாநிலத்தில் தண்ணீர் பற்றாக்குறை தான் உள்ளது, தண்ணீர் பஞ்சம் அல்ல என்று தமிழக அரசு கூறுவது கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் உள்ள அமைச்சர்கள் குளங்கள், ஏரிகளை நேரில் பார்வையிட்டு உண்மை நிலவரத்தை அறிந்து அதன் பின்னர் குடிநீர் பிரச்சினை பற்றி பேசவேண்டும்.

இவ்வாறு பேசினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட நிர்வாகி செல்வராஜ் நன்றி கூறினார்.


Next Story