விருதுநகரில் 30 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத அரசு கட்டிடம் இடிந்து விழும் அபாயம்


விருதுநகரில் 30 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத அரசு கட்டிடம் இடிந்து விழும் அபாயம்
x
தினத்தந்தி 25 Jun 2019 11:00 PM GMT (Updated: 25 Jun 2019 9:02 PM GMT)

விருதுநகரில் 30 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத அரசு கட்டிடம் இடிந்து விழும் அபாயகரமான நிலையில் உள்ளது. அதனை உடனே இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் சொக்கநாதசாமி கோவில் அருகில் உள்ள பெருமாள்கோவில் தெருவில் முற்றிலுமாக சேதம் அடைத்து இடிந்து விழும் நிலையில் அரசு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் 30 ஆண்டுகளுக்கு முன்னர் வருவாய் ஆய்வாளர் அலுவலகமாக செயல்பாட்டில் இருந்து வந்துள்ளது. அங்கிருந்த வருவாய் ஆய்வாளர் அலுவலகம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு விட்டதால் இந்த கட்டிடம் பயன்பாட்டில் இல்லாமல் பூட்டியே கிடந்தது.

காலப்போக்கில் கட்டிடத்தில் இருந்த ஜன்னல், கதவு போன்ற மரச்சாமான்கள் அங்கிருந்து வெளிநபர்களால் எடுத்துச்செல்லப்பட்டு விட்டது. தற்போது இந்த கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

மாவட்ட நிர்வாகம் மாவட்டத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடங்களை கண்டறிந்து அவற்றை அகற்ற கடந்த ஆண்டே நடவடிக்கை எடுத்தது. ஆனால் மாவட்ட தலைநகரான விருதுநகரில் நகரின் மையப்பகுதியில் இடிந்து விழும் நிலையில் உள்ள இந்த கட்டிடத்தை அகற்றாமல் விட்டு விட்டது ஏன் என்று தெரியவில்லை.

இந்த கட்டிடத்தின் வழியாகத்தான் அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் இருந்து குழந்தைகள் பள்ளிக்கு சென்று வருகிறார்கள். கோவிலுக்குச்செல்லும் பக்தர்களும் இந்த கட்டிடம் இருக்கும் பகுதி வழியாகத்தான் சென்று வரும் நிலை உள்ளது. இந்த கட்டிடம் திடீரென்று இடிந்து விழுந்தால் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிக்கும் அந்த வழியாக செல்வோருக்கும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. மேலும் இந்த கட்டிடத்துக்கு அருகிலுள்ள சுகாதார வளாகம் பயன்பாட்டில் இல்லாத நிலையில் இரவு நேரங்களில் இந்த கட்டிடப்பகுதியில் சுகாதார கேடும் ஏற்படும் நிலை உள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த கட்டிடத்தை அகற்றுவதுடன் இந்த இடத்தில் மக்களுக்கு பயன்படும் வகையில் வேறு கட்டிடங்களை கட்டி பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. விபரீதம் ஏற்படுவதற்கு முன்பு விழித்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.


Next Story