ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 Jun 2019 11:00 PM GMT (Updated: 25 Jun 2019 9:32 PM GMT)

ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊத்தங்கரை,

அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட துணை செயலாளர் சத்தியராஜ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சுப்பிரமணி, மொளுகு, சுப்பிரமணி, ரத்தினம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி, மாவட்ட பொருளாளர் செல்வராசு, மாவட்ட குழு உறுப்பினர் வேலு ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்த வேண்டும். சிங்காரப்பேட்டை சந்தைப் பகுதி, அனுமன்தீர்த்தம் மேம்பாலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் துர்நாற்றம் வீசி நோயை உண்டாக்கக்கூடிய குப்பைகளையும், கழிவுகளையும் அப்புறப்படுத்த வேண்டும். அந்த பகுதிகளில் சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.

குடிநீர் தட்டுப்பாடு

60 வயது முடிந்த அனைவருக்கும் நிபந்தனையின்றி முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும். ஊத்தங்கரை ஒன்றியத்தில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போர்க்கால அடிப்படையில் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் நிர்வாகிகள் விஜயகுப்பன், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story