சிலை செய்ததில் தங்கம் மோசடி: கைதான அர்ச்சகருக்கு ஜாமீன் கும்பகோணம் கோர்ட்டு வழங்கியது


சிலை செய்ததில் தங்கம் மோசடி: கைதான அர்ச்சகருக்கு ஜாமீன் கும்பகோணம் கோர்ட்டு வழங்கியது
x
தினத்தந்தி 26 Jun 2019 11:00 PM GMT (Updated: 26 Jun 2019 6:50 PM GMT)

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சிலை செய்ததில் தங்கம் மோசடி செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட கோவில் அர்ச்சகருக்கு கும்பகோணம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.

கும்பகோணம்,

காஞ்சீபுரத்தில் பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சோமாஸ்கந்தர் சிலை செய்யப்பட்டது. இந்த சிலை செய்ததில் 100 கிலோவுக்கு மேல் தங்கம் மோசடி செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஏகாம்பரநாதர் கோவில் அர்ச்சகர் ராஜப்பா குருக்களுக்கு(வயது 87) தொடர்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இது குறித்து அறநிலையத்துறையினர் கொடுத்த புகாரின்பேரில் காஞ்சீபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜப்பா குருக்களை தேடி வந்தனர். போலீசார் தன்னை தேடுவதை அறிந்த ராஜப்பா குருக்கள், கனடா நாட்டுக்கு தப்பி சென்று விட்டார். அவரை தேடப்படும் குற்றவாளியாக போலீசார் அறிவித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பினர்.

இந்த நிலையில் ராஜப்பா குருக்கள் கனடா நாட்டில் இருந்து கடந்த 22-ந் தேதி மும்பைக்கு வந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ராஜப்பா குருக்களை கைது செய்தனர். பின்னர் அவரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைந்தனர். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், மும்பையில் இருந்து ராஜப்பா குருக்களை கும்பகோணத்துக்கு அழைத்து வந்தனர்.

கும்பகோணத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதிபதி மாதவராமனுஜர் வீட்டுக்கு ராஜப்பா குருக்களை போலீசார் அழைத்து சென்று ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். தனக்கு ஜாமீன் வழங்குமாறு ராஜப்பா குருக்கள் தாக்கல் செய்த மனு கும்பகோணம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வயது மூப்பு காரணமாக ராஜப்பா குருக்களின் ஜாமீனுக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதைத்தொடர்ந்து ராஜப்பா குருக்களுக்கு கும்பகோணம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.

Next Story