மழைக்காலம் தொடங்கும் முன்பு நல்லதங்காள் ஓடை அணையை தூர் வார வேண்டும்; விவசாயிகள் கோரிக்கை


மழைக்காலம் தொடங்கும் முன்பு நல்லதங்காள் ஓடை அணையை தூர் வார வேண்டும்; விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 26 Jun 2019 10:45 PM GMT (Updated: 26 Jun 2019 8:08 PM GMT)

மழைக்காலம் தொடங்குவதற்கு முன் நல்லதங்காள் ஓடை அணையை தூர் வார வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூலனூர்,

திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பொன்னிவாடி ஊராட்சியில் நல்லதங்காள் ஓடை அணை பொதுப்பணித்துறையின்கீழ் கட்டப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டு கடந்த 5.4.2008 அன்று பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. இந்த நல்லதங்காள் அணை பொன்னிவாடி, நல்லாம்பளையம், ஆலாம்பாளையம், பெரமியம், தூரம்பாடி, மூலனூர் உட்பட சுமார் 4,744 ஏக்கர் பயன்பெறும் வகையில் ரூ.42 கோடி மதிப்பில் கட்டப்பட்டது.

இந்த அணைக்கட்டிற்கு எல்லா காலங்களிலும் தண்ணீர் வரத்து இருப்பதில்லை. அப்படி பருவகாலங்களில் கிடைக்கும் நீர் போதுமானதாக இருப்பதில்லை இதனால் இந்த அணைக்கட்டு பெரும்பாலான காலங்களில் வறண்டே காணப்படுகிறது. இந்த அணையின் நீர்தேக்க பரப்பளவு 774.74 ஏக்கர் ஆகும், அணையில் 30 கனஅடி தண்ணீரை தேக்கிவைக்க முடியும். அணையின் கட்டுமான பணிகள் நடைபெற்ற போது இருந்த மண்திட்டுகள், பாறைகள் பழைய வீட்டு சுவர்கள், பாறைகள் ஆகியவை இன்னும் அகற்றப்படாமலேயே உள்ளது. இதனால் அணையில் முழுகொள்ளளவு தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல் உள்ளது.

இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறும்போது ‘‘ நல்லதங்காள் ஓடை அணை திட்டம் விவசாயிகளுக்கு கிடைத்த வரபிரசாதம் ஆகும். நல்லதங்காள் ஓடை அணையில் கட்டுமான பணிகள் நடைபெற்றபோது அணையின் நீர்தேக்க பகுதிகளில் கட்டப்பட்டு இருந்த வீட்டுச்சுவர்கள் மற்றும் மண்திட்டுகள், பாறைகள், மரங்கள் முழு அளவில் அகற்றப்பட வில்லை. எனவே மழைக்காலம் தொடங்கும் முன்பு அணையை தூர்வார வேண்டும்’’ என்றனர்.


Next Story