சூளகிரி அருகே மூதாட்டி வெட்டிக்கொலை போலீசார் விசாரணை


சூளகிரி அருகே மூதாட்டி வெட்டிக்கொலை போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 26 Jun 2019 10:15 PM GMT (Updated: 26 Jun 2019 8:58 PM GMT)

சூளகிரி அருகே மூதாட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள கானலட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமையா. விவசாயி. இவரும், பில்லம்மா என்கிற பில்லக்கா (வயது 80) என்ற மூதாட்டியும் கடந்த 40 ஆண்டுகளாக கணவன்-மனைவி போல் குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று காலை அவர்களது வீட்டின் வெளிப்புற கதவு பூட்டப்பட்டு இருந்தது.

நீண்ட நேரம் ஆகியும் அவர்களின் வீட்டு கதவு திறக்கப்படவில்லை. இதன் காரணமாக அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் உள்ளே மூதாட்டி பில்லம்மா மூக்கு மற்றும் வாயில் ரத்தம் வழிந்தோடிய நிலையிலும், கை, காது உள்ளிட்ட பகுதிகளில் அரிவாளால் வெட்டுப்பட்டு கொலையுண்ட நிலையிலும் பிணமாக கிடந்தார்.

போலீசார் விசாரணை

மேலும் அவரது உடல் அருகிலேயே ரத்தக்கறையுடன் ஒரு அரிவாள் கிடந்்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து சூளகிரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது ராமையா வீட்டில் இல்லாமல் தலைமறைவாக இருந்தது தெரியவந்தது. இதனால் அவர் இந்த கொலையை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதைத் தொடர்ந்து மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். தலைமறைவாக உள்ள ராமையா பிடிபட்டால் தான் கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சூளகிரி அருகே மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story