அரியலூர் மாவட்டத்தில் நடந்த ஜமாபந்தியில் 3 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு


அரியலூர் மாவட்டத்தில் நடந்த ஜமாபந்தியில் 3 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு
x
தினத்தந்தி 27 Jun 2019 11:00 PM GMT (Updated: 27 Jun 2019 7:27 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் நடந்த ஜமாபந்தியில் 3 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் 1428-ம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) கணக்கு முடிப்பு இறுதி நாள் நிகழ்ச்சியாக விவசாய குடிகள் மாநாடு நிகழ்ச்சி ஜெயங்கொண்டத்தில் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கி பேசுகையில், அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஆண்டிமடம், உடையார்பாளையம், செந்துறை ஆகிய தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 19-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சிகளில் மொத்தம் 7,212 மனுக்கள் பெறப்பட்டு, 3,004 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, 3,263 மனுக்கள் விசாரணையில் உள்ளது. மேலும், 945 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றார்.

உதவித்தொகைக்கான ஆணை

முன்னதாக வருவாய்த்துறையின் சார்பில் 12 பேருக்கு பட்டாக்கள் மற்றும் 10 பேருக்கு உதவித்தொகைக்கான ஆணைகளையும், வேளாண்மைத்துறையின் சார்பில் 6 பேருக்கு வேளாண் இடுபொருட்களும், 4 பேருக்கு அரசு கேபிள் டி.வி வாயிலாக தனியார் இ-சேவை மையங்களுக்கு உரிமங்களையும் வழங்கினார். இதில் உதவி கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) உமாமகேஸ்வரி, மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரி ரவிச்சந்திரன், தாசில்தார் குமரய்யா, துணை வட்டாட்சியர்கள், நில அளவை அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story