ஆரணி அருகே மினிபஸ் சக்கரத்தில் சிக்கி சிறுமி பலி தாய் கண் முன்னே பரிதாபம்


ஆரணி அருகே மினிபஸ் சக்கரத்தில் சிக்கி சிறுமி பலி தாய் கண் முன்னே பரிதாபம்
x
தினத்தந்தி 27 Jun 2019 11:41 PM GMT (Updated: 27 Jun 2019 11:41 PM GMT)

ஆரணி அருகே மினி பஸ் சக்கரத்தில் சிக்கி தாய் கண் முன்னே சிறுமி பரிதாபமாக இறந்தாள்.

ஆரணி,

ஆரணியை அடுத்த கல்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 40). இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மகள் கோகிலபிரியா (வயது 4). இவளுக்கு உடல்நிலை சரியில்லாததால் பாட்டி சாந்தியுடன் ஆரணிக்கு வந்து டாக்டரிடம் சிகிச்சை பெற்றாள். பின்னர் பாட்டியும், பேத்தியும் மினி பஸ்சில் ஊருக்கு திரும்பி வந்தனர்.

வீட்டின் முன்பு பஸ்சில் இருந்து சாந்தியும், கோகுலபிரியாவும் இறங்கினர். அப்போது எதிர்புறத்தில் இருந்து தாய் தனலட்சுமி குழந்தையை பெயர் சொல்லி அழைத்து இப்படி வா? என்று கூப்பிட்டுள்ளார்.

தாயை பார்த்த சந்தோஷத்தில் கோகுலபிரியா ஓடிவந்தாள். அப்போது திடீரென மினிபஸ்சை டிரைவர் இயக்கியதால் பஸ்சின் பின்சக்கரத்தில் சிக்கி சிறுமி சம்பவ இடத்திலேயே தாய் கண்முன்னே பரிதாபமாக இறந்தாள்.

இதனை பார்த்து ஆவேசமான அங்கிருந்த இளைஞர்கள் பஸ்சின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர்.

இதுகுறித்து ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் மதன்ராஜ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story