குத்தாலம் அருகே சாராயம் கடத்திய 2 பேர் கைது கார் பறிமுதல்


குத்தாலம் அருகே சாராயம் கடத்திய 2 பேர் கைது கார் பறிமுதல்
x
தினத்தந்தி 30 Jun 2019 11:00 PM GMT (Updated: 30 Jun 2019 6:54 PM GMT)

குத்தாலம் அருகே சாராயம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்தனர்.

குத்தாலம்,

குத்தாலம் அருகே திருமணஞ்சேரி மெயின் ரோட்டில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் காரில் சாராயம் இருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து காரில் வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மயிலாடுதுறை திருவிழந்தூர் அண்ணாநகரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ரமேஷ் (வயது 32) என்பதும், மற்றொருவர் மயிலாடுதுறை பேச்சாவடி அருணாநகரை சேர்ந்த ராஜூ மகன் பாபு (25) என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து பந்தநல்லூர் பகுதிக்கு சாராயம் கடத்தி சென்றது தெரிய வந்தது.

2 பேர் கைது

இதையடுத்து குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ், பாபு ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து 110 லிட்டர் சாராயம், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story