மணல் கடத்தல்: 5 மாட்டு வண்டிகள்- டிராக்டர் பறிமுதல் 5 பேர் கைது


மணல் கடத்தல்: 5 மாட்டு வண்டிகள்- டிராக்டர் பறிமுதல் 5 பேர் கைது
x
தினத்தந்தி 30 Jun 2019 10:15 PM GMT (Updated: 30 Jun 2019 7:34 PM GMT)

மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 5 மாட்டு வண்டிகள், டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

பாபநாசம்,

பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம், சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் பாபநாசம் அருகே உள்ள பண்டாரவாடை, சின்னப்பங்கரை உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 5 மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வரப்படுவது தெரியவந்தது.

இதையடுத்து 5 மாட்டு வண்டிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மாட்டு வண்டிகளை ஓட்டி வந்த ராஜகிரியை சேர்ந்த சக்கரவர்த்தி (வயது47), பாபநாசத்தை சேர்ந்த பூவேந்திரன் (35), பண்டாரவாடையை சேர்ந்த மாரிமுத்து (32), கரிகாலன்(23), சரத்குமார் (26) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

டிராக்டர் பறிமுதல்

இதேபோல் பாபநாசம் ரோஸ் நகர் பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு டிராக்டரில் மணல் கடத்தி வரப்படுவது தெரியவந்தது. அந்த டிராக்டரின் டிரைவர் போலீசாரை பார்த்ததும் டிராக்டரை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய டிராக்டர் டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

Next Story