தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் இல்லை திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி


தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் இல்லை திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 30 Jun 2019 11:00 PM GMT (Updated: 30 Jun 2019 8:15 PM GMT)

தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் எந்தவித குழப்பமும் இல்லை என்று திருநாவுக்கரசர் எம்.பி. கூறினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர் இயக்கம் சார்பில் தைல மரம் மற்றும் கருவேல மரங்களின் தீமைகளை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் இயற்கை வள பாதுகாப்பு விழிப்புணர்வு பயணம் 30 நாட்கள் நடைபெறுகிறது. இதில் தைல மரம் மற்றும் கருவேல மரங்களால் புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலத்தடி நீர் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு அதள பாதாளத்துக்கு சென்றுவிட்டது. அந்த மரங்களை உடனடியாக தமிழக அரசு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த பிரசார பயணம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த பிரசார பயணத்தை புதுக்கோட்டை பஸ் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி. கொடியசைத்து தொடங்கி வைத்து பேசினார். இதில் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

கண்டனத்துக்குரியது

முன்னதாக திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

பல மாநிலங்களில் பா.ஜ.க.வை தோற்கடித்து காங்கிரஸ் வெற்றி பெற்றும், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை தழுவியது பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது. இதனால் தான் வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் கோரிக்கை விடுத்து உள்ளது.

ராகுல் காந்தியே காங்கிரஸ் தலைவராக தொடர வேண்டும் என்று அனைத்து முக்கிய தலைவர்களும், நாடாளுமன்ற குழு தலைவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரே நாடு ஒரே ரேஷன் என்று சொல்லி ஒன்றாக இருக்கும் இந்தியாவை மத்திய பா.ஜ.க. அரசு பிளவுபடுத்தவும், துண்டாடவும் முயற்சிக்கிறது. இது கண்டனத்துக்குரியது.

தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு

தமிழ்நாட்டில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. ஆனால் தண்ணீர் பஞ்சம் இல்லை என்று தமிழக அமைச்சர்கள் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கின்றனர். பொய்யான விஷயங்களை அமைச்சர்கள் கூறாமல் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் எந்தவித குழப்பமும் இல்லை. தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணி உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் தொடர வேண்டும் என்பதே தி.மு.க., காங்கிரஸ் மற்றும் தொண்டர்களின் எண்ணம்.

ஒருவரை கட்சியில் இருந்து நீக்குவதும், பின்னர் அதற்கு அவர் வருத்தம் தெரிவித்ததும் மீண்டும் உறுப்பினராக சேர்ப்பதும் சாதாரண ஒன்றுதான். அதை பெரிதுபடுத்த வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக திருநாவுக்கரசர் புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தின் ஒரு பகுதியில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி எம்.பி. அலுவலகத்தின் ஒரு கிளையை தொடங்கி வைத்தார்.

Next Story