மதுரை விமான நிலையத்தில் மர்ம பெட்டியால் பரபரப்பு, வெடிகுண்டு அச்சத்தில் பயணிகளை அப்புறப்படுத்திய பாதுகாப்பு படையினர்


மதுரை விமான நிலையத்தில் மர்ம பெட்டியால் பரபரப்பு, வெடிகுண்டு அச்சத்தில் பயணிகளை அப்புறப்படுத்திய பாதுகாப்பு படையினர்
x
தினத்தந்தி 30 Jun 2019 11:00 PM GMT (Updated: 30 Jun 2019 11:34 PM GMT)

மதுரை விமான நிலையத்தில் அனாதையாக கிடந்த மர்ம பெட்டியால் பரபரப்பு ஏற்பட்டது. அதில் வெடிகுண்டு இருக்குமோ என்ற அச்சத்தில் பாதுகாப்பு படையினர் பயணிகளை அங்கிருந்து வெளியேற்றினர்.

மதுரை, 

மதுரை விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. மதுரையில் இருந்து சென்னை, மும்பை, டெல்லி ஆகிய நகரங்களுக்கும், சிங்கப்பூர், இலங்கை ஆகிய வெளிநாடுகளுக்கும் விமான சேவை உள்ளது. எனவே விமான பயணிகளின் பாதுகாப்புக்காக தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பயணிகளின் உடைமைகள் அனைத்தும் தீவிரமாக சோதனை செய்யப்படுகின்றன. அதே போல் கண்காணிப்பு கேமரா மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.

இந்த நிலையில் விமான நிலையத்தில் நேற்று பகல் 1.40 மணி அளவில் பயணிகள் புறப்பாடு பகுதி அருகில் ஒரு பெட்டி அனாதையாக கிடந்தது. இதனை கண்ட பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர், அங்கிருந்தவர்களிடம் இது யாருடைய பெட்டி என்று கேட்டார். ஆனால் ஒவ்வொருவரும் இது தங்களுடையது அல்ல என கூறிவிட்டனர்.

உடனே அவர் தனது வாக்கி-டாக்கி மூலம் “புறப்பாடு பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் ஒரு மர்ம பெட்டி உள்ளது. உடனே பாதுகாப்பை பலப்படுத்தவும் பாதுகாப்பு வீரர்கள் உடனே இங்கு வர வேண்டும்'' என்றும் கூறினார். உடனே அங்கு பாதுகாப்பு படை வீரர்கள் குவிந்தனர். அவர்கள் அந்த பகுதியின் இருக்கையில் அமர்ந்திருந்த பயணிகள் மற்றும் பொதுமக்களை அங்கிருந்து வெளியேறும்படி கேட்டு கொண்டனர்.

மேலும் பெட்டியில் வெடிகுண்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அந்த பெட்டி அருகில் யாரும் வரக்கூடாது என்று சுற்றி வளைத்து பாதுகாப்பு அரண் ஒன்றை ஏற்படுத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வெடிகுண்டு நிபுணர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

இதற்கிடையே வாலிபர் ஒருவர், அது தன்னுடைய பெட்டி என்றும், பெட்டியை இங்கு வைத்து விட்டு விமான நிலைய டிக்கெட் கவுண்டருக்கு சென்றதாகவும் கூறினார். உடனே பாதுகாப்பு படை வீரர்கள், “அந்த பெட்டியில் என்ன இருக்கிறது, நீங்கள் யார், எங்கு செல்கிறீர்கள்'' என்று கேள்விகள் கேட்டு கெடுபிடி செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பின், அந்த வாலிபரை பெட்டியை திறக்க சொன்னார்கள். அந்த வாலிபரும் பெட்டியை திறந்து காண்பித்தார். அதில் உடைமைகள் மட்டுமே இருந்தன. இருப்பினும் அதனை பாதுகாப்பு படை வீரர்கள் முழுமையாக சோதித்தனர். அதன்பின் வாலிபரிடம் அந்த பெட்டி ஒப்படைக்கப்பட்டது.

Next Story