மடிக்கணினி வழங்கக்கோரி, கலெக்டர் அலுவலகத்தை கல்லூரி மாணவர்கள் முற்றுகை


மடிக்கணினி வழங்கக்கோரி, கலெக்டர் அலுவலகத்தை கல்லூரி மாணவர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 1 July 2019 10:45 PM GMT (Updated: 1 July 2019 4:57 PM GMT)

மடிக்கணினி வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை கல்லூரி மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

விழுப்புரம்,

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2017-18-ம் ஆண்டு 210 மாணவ- மாணவிகள் பிளஸ்-2 முடித்தனர். இவர்கள் பிளஸ்-1 படிக்கும்போதே விலையில்லா மடிக்கணினி வழங்குவதற்காக அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் பிளஸ்-1 முடிக்கும் வரை இவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படவில்லை. இதுபற்றி ஆசிரியர்களிடம் மாணவர்கள் கேட்டதற்கு பிளஸ்-2 படிக்கும்போது வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள். ஆனால் பிளஸ்-2 படிப்பை முடித்த நிலையிலும் இவர்களுக்கு மடிக்கணினி வழங்கவில்லை.

தற்போது இந்த மாணவ- மாணவிகள் பெரும்பாலானோர் விழுப்புரத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 2-ம் ஆண்டு படித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசால் வழங்க வேண்டிய மடிக்கணினி இதுநாள் வரையிலும் வழங்கப்படாததால் கல்வி சம்பந்தமான பல்வேறு வி‌‌ஷயங்களை தெரிந்துகொள்ள முடியாமல் மிகவும் அவதிப்பட்டனர். இதுபற்றி மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் மடிக்கணினி வழங்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவ- மாணவிகள் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தாங்கள் பள்ளியில் படிக்கும்போது அரசால் வழங்க வேண்டிய மடிக்கணினியை உடனே வழங்கும்படி அவர்கள் கோ‌‌ஷம் எழுப்பினர்.

உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ- மாணவிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களை மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க அனுப்பி வைத்தனர். அப்போது கலெக்டர் சுப்பிரமணியனிடம் மாணவ- மாணவிகள் கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவை பெற்ற கலெக்டர், இதுபற்றி அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் மடிக்கணினி வழங்குவதாக கூறினார். இதனை ஏற்ற மாணவ- மாணவிகள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story