கல்பாக்கம் அருகே வேன்-டேங்கர் லாரி மோதல்; 2 பேர் பலி


கல்பாக்கம் அருகே வேன்-டேங்கர் லாரி மோதல்; 2 பேர் பலி
x
தினத்தந்தி 2 July 2019 10:45 PM GMT (Updated: 2 July 2019 5:46 PM GMT)

கல்பாக்கம் அருகே வேன்-டேங்கர் லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்.

கல்பாக்கம்,

காஞ்சீபுரம் மாவட்டம் கேளம்பாக்கத்தில் தனியார் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் கல்பாக்கத்தை அடுத்த கல்குளம் கிராமத்தை சேர்ந்த பாலாஜி என்ற விக்னேஷ் (வயது 28), ஏசுராஜ் (21), கர்ணன் கவி (21), சூரிய பிள்ளையார்குப்பம் கிராமத்தை சேர்ந்த அய்யனார் (23), பிரகாஷ் (20), செல்வம் (19) உள்ளிட்ட ஏராளமானோர் வேலை செய்து வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு பணி பார்த்த இவர்கள் உள்ளிட்ட 10 பேர் நேற்று காலை வேனில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

அந்த வேனை கல்பாக்கத்தை அடுத்த அணைக்கட்டு கிராமத்தை சேர்ந்த செல்வகுமார் (30) ஓட்டி வந்தார். கல்பாக்கத்தை அடுத்த வேப்பஞ்சேரி கிராமம் அருகே செல்லும்போது எதிரே டேங்கர் லாரி வேகமாக வந்தது. எதிர்பாராதவிதமாக லாரியும், வேனும் நேருக்கு நேராக மோதிக்கொண்டன. இதில் வேனின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது.

லாரி மோதிய வேகத்தில் வேன் பின்னோக்கி சென்று சாலையோர பள்ளத்தில் இறங்கி மரத்தில் மோதி நின்றது. விபத்தில் சிக்கியவர்களின் அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதி மக்கள் கூடினர். இதுகுறித்து கூவத்தூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களை மீட்டு உடனடியாக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பாலாஜி மற்றும் அய்யனார் இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். லாரியை ஓட்டி வந்த விழுப்புரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரும் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story