மும்பையில் 45 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு காணாத மழை ; இயல்பு வாழ்க்கை முடங்கியது - ஒரே நாளில் 37 பேர் பலி


மும்பையில் 45 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு காணாத மழை ; இயல்பு வாழ்க்கை முடங்கியது - ஒரே நாளில் 37 பேர் பலி
x
தினத்தந்தி 3 July 2019 12:15 AM GMT (Updated: 2 July 2019 7:14 PM GMT)

மும்பையில் 45 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு காணாத மழை பெய்ததால் இயல்பு வாழ்க்கை முடங்கியது. மும்பை குர்லாவில் குடிசை வீடுகள் மீது சுவர் இடிந்து விழுந்ததில், 21 பேர் பலியானது உள்பட மாநிலத்தில் பல்வேறு இடங்களில் ஒரே நாளில் 37 பேர் உயிரிழந்தனர்.

மும்பை, 

மராட்டியத்தில் தென்மேற்கு பருவமழை அதி தீவிரமடைந்து பெய்து வருகிறது. குறிப்பாக மாநில தலைநகர் மும்பையில் தாமதமாக தொடங்கிய பருவமழை நகரை புரட்டி எடுத்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் 5 நாட்களாக இரவு, பகலாக விடாமல் கொட்டி தீர்த்து வருகிறது. நகரமே வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ள நிலையில், நேற்று முன்தினம் இரவும் விடிய, விடிய அடை மழை கொட்டி தீ்ர்த்தது. நேற்று பகலிலும் மழை வெளுத்து வாங்கியது. இதனால் மும்பை நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது.

தாழ்வான பகுதிகளில் வீடுகளும், சாலைகளும் தெரியாத அளவுக்கு வெள்ளக்காடாக மாறி உள்ளன. சாலை, ரெயில், விமான போக்குவரத்தும் முடங்கி விட்டது. பொதுமக்கள் அவசியம் இன்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

1974-ம் ஆண்டு மும்பையில் இதேபோன்ற பிரளயம் ஏற்பட்டது. அப்போது ஒரே நாளில் 375.2 மி.மீ. மழை பெய்தது. 45 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அதே மழை அளவு பதிவாகி உள்ளது. அதாவது, நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 375.2 மி.மீ. பதிவாகி வரலாறு காணாத மழை பெய்து உள்ளது.

மும்பையின் பக்கத்து மாவட்டங்களான தானே, பால்கரும் வெள்ளத்தில் மிதக்கின்றன.

கொட்டி தீர்க்கும் பேய் மழை உயிர் பலியும் வாங்கி வருகிறது. கடந்த 29-ந் தேதி புனேயில் மழையின் போது, அடுக்குமாடி குடியிருப்பு சுற்றுச்சுவர் இடிந்து 15 பேர் பலியானார்கள்.

இந்தநிலையில், நேற்று ஒரே இரவில் மும்பை, தானே, பால்கர், புனேயில் பெய்த கனமழை கொத்து, கொத்தாக உயிர் பலி வாங்கி விட்டது.

மும்பை மலாடு கிழக்கு குரார் பிம்பிரிபாடா பகுதியில் இருக்கும் மலையடிவாரத்தில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். மலையையொட்டி சஞ்சய் காந்தி தேசிய பூங்காவின் எல்கையை வரையறுக்கும் வகையில் பெரிய தடுப்புச்சுவர் எழுப்பப்பட்டு இருந்தது.

அதையொட்டி வசித்து வந்த குடியிருப்புவாசிகளுக்கு அந்த தடுப்பு சுவர் எமனாக மாறிவிட்டது. குடிசைவாசிகள் அனைவரும் அயர்ந்த தூக்கத்தில் இருந்த போது நேற்று அதிகாலை 2 மணியளவில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்து விட்டது.

அடை மழை காரணமாக, மலை தடுப்புச்சுவர் திடீரென இடிந்து குடிசை வீடுகள் மீது விழுந்து அமுக்கியது.

இதில் வீடுகள் தரைமட்டமாகின. உள்ளே தூங்கிக்கொண்டிருந்த பலர் இடிபாடுகளில் சிக்கி புதைந்தனர். பலர் படுகாயம் அடைந்து உதவி கேட்டு கூச்சல் போட்டனர். சுவர் இடிந்த சத்தம்கேட்டு அக்கம்பக்கத்து வீடுகளை சேர்ந்தவர்கள் ஓடிவந்தனர். மலை தடுப்புச்சுவர் வீடுகள் மீது இடிந்து விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர்.

இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொட்டும் மழையில் இடிபாடுகளை அகற்றி உள்ளே சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டனர்.

பெரும் சிரமத்துக்கு மத்தியில் இடுபாடுகளுக்குள் சிக்கியிருந்த 21 பேர் பிணமாக மீட்டனர். 78 பேர் காயம் அடைந்தனர்.

உடனுக்குடன் அவர்கள் அருகில் உள்ள அந்தேரி கூப்பர், காந்திவிலி சதாப்தி, மலாடு எம்.டபிள்யு. தேசாய், ஜோகேஸ்வரி டிராமாகா கேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 15 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர்.

பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த துயர சம்பவம் பற்றி அறிந்ததும் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார்.

மேலும் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

மும்பை மலாடு பகுதியில் சுரங்கப்பாதை வழியாக சென்ற கார் மழை வெள்ளத்தில் மூழ்கி, அதற்குள் இருந்த 2 பேர் பலியானார்கள்.

மும்பை வில்லேபார்லேயில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். இதுபோல முல்லுண்டில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் காவலாளி ஒருவர் உயிரிழந்தார்.

தானே மாவட்டம் கல்யாணில் தேசிய உருது பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து 3 பேர் உயிரிழந்தனர். பால்கர் மாவட்டத்தில் 2 பேர் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனர்.

புனே அம்பேகாவ் பகுதியில் உள்ள சின்ஹாட் என்ற கல்லூரியின் சுற்றுச்சுவர் மழையின் போது இடிந்தது. இதில் அந்த சுற்றுச்சுவரை ஒட்டி குடிசை அமைத்து தங்கியிருந்த 6 தொழிலாளர்கள் பலியானார்கள்.

புல்தானாவில் மின்னல் தாக்கியதில் 55 வயது நபர் ஒருவர் பலியானார்.

ஒரே இரவில் மழைக்கு 37 பேர் பலியாகி இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மராட்டியம் முழுவதும் கடந்த 5 நாட்களில் மழையின் காரணமாக ஏறத்தாழ 60 பேர் வரை உயிரிழந்து இருக்கிறார்கள்.

இடிபாடுகளில் சிக்கியிருந்த போது தண்ணீர் கேட்டு கதறிய சிறுமி பரிதாப சாவு

மும்பை குராரில் கனமழை காரணமாக தடுப்புச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 21 குடிசைவாசிகள் உயிரிழந்தனர். தடுப்புச்சுவர் இடிந்து விழுந்த சத்தம்கேட்டதும் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, இடிபாடுகளில் அங்குள்ள குடிசை வீட்டில் வசித்து வந்த சஞ்சிதா என்ற 10 வயது சிறுமியும் சிக்கியிருந்தாள். அவள் ‘என்னை காப்பாற்றுங்கள்' என்று கூச்சல் போட்டாள். மேலும் தனக்கு தாகமாக இருப்பதாக தண்ணீர் கேட்டு கதறினாள். அவளது சத்தம் கேட்டதும் அங்கிருந்தவர்கள் உடனடியாக இடிபாடுகளை அகற்றினர். அவளை போராடி மீட்டனர். உடனடியாக அவள் சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டாள். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி சஞ்சிதா பரிதாபமாக உயிரிழந்தாள்.

இந்த விபத்து பற்றி அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் கூறுகையில், இடிந்து விழுந்த தடுப்புச்சுவரின் மறுபக்கத்தில் கனமழை காரணமாக அதிகளவில் மழைநீர் தேங்கி நின்றது. தண்ணீரின் அழுத்தம் தாங்க முடியாமல் சுவர் இடிந்து விழுந்து விட்டது. அப்போது பயங்கர சத்தத்துடன் சுனாமி வந்தது போல் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது, என்றார்.

Next Story