கணவருடன் மோட்டார்சைக்கிளில் சென்றபோது விபத்து, வேகத்தடையில் ஏறி இறங்கியதில் தவறி விழுந்து பெண் சாவு


கணவருடன் மோட்டார்சைக்கிளில் சென்றபோது விபத்து, வேகத்தடையில் ஏறி இறங்கியதில் தவறி விழுந்து பெண் சாவு
x
தினத்தந்தி 3 July 2019 10:45 PM GMT (Updated: 3 July 2019 6:31 PM GMT)

வீரபாண்டி அருகே கணவருடன் சென்ற பெண், மோட்டார்சைக்கிள் வேகத்தடையில் ஏறி இறங்கிய போது தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

உப்புக்கோட்டை,

தேனி மாவட்டம் உத்தமபாளையம் கோட்டைமேடு மேலரத வீதியை சேர்ந்தவர் முகமதுரபீக்ராஜா (வயது 34). இவர் நேற்று காலை தனது மனைவி ரெஜினா பேகம் (31) மற்றும் இவர்களது மகள்களான மீரா பாத்திமா (7), ஆத்திமா பாத்திமா (1) ஆகியோருடன் உத்தமபாளையத்தில் இருந்து தேனிக்கு மோட்டார்சைக்கிளில் சென்றார்.

வழியில் வீரபாண்டி அருகே உள்ள கோட்டூர் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது சாலையில் இருந்த வேகத்தடையில் மோட்டார்சைக்கிள் ஏறி இறங்கியது.

இதில் பின்னால் உட்கார்ந்து இருந்த ரெஜினா, குழந்தை ஆத்திமா பாத்திமாவுடன் கீழே தவறி விழுந்து விட்டார். அதையொட்டி ரெஜினாபேகம் பலத்த காயமடைந்தார். குழந்தைக்கு காயம் ஏற்பட வில்லை.

இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story