கொத்தமங்கலத்தில் நீர்நிலைகளை இளைஞர்கள் சீரமைக்கும் நிலையில் வரத்துவாய்க்கால் கரைகளை உடைத்து மண் கடத்தும் மர்ம நபர்கள்


கொத்தமங்கலத்தில் நீர்நிலைகளை இளைஞர்கள் சீரமைக்கும் நிலையில் வரத்துவாய்க்கால் கரைகளை உடைத்து மண் கடத்தும் மர்ம நபர்கள்
x
தினத்தந்தி 3 July 2019 10:30 PM GMT (Updated: 3 July 2019 6:57 PM GMT)

கொத்தமங்கலத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க இளைஞர்கள் சொந்த செலவில் சீரமைத்து வரும் நிலையில் வரத்துவாய்க்கால் கரைகளை உடைத்து மண்ணை கடத்தும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இளைஞர்கள் கூறுகின்றனர்.

கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே கொத்தமங்கலம் கிராமத்தில் உள்ள பெரிய நீர்நிலைகளை பாதுகாத்து, கரைகளை பலப்படுத்தி, குளத்தை ஆழப்படுத்தி, வரத்து வாய்க்கால்களை சீரமைத்து, மழை தண்ணீரை சேமித்து, நிலத்தடி நீரை உயர்த்த வேண்டும் என்று கொத்தமங்கலம் இளைஞர் மன்றத்தினர் சொந்த செலவில் கடந்த 52 நாட்களாக செய்து வருகின்றனர். இதில் அம்புலி ஆறு அணைக்கட்டு, அய்யனார் கோவில் குளம், கோடிய குளம் ஆகிய குளங்கள் சீரமைக்கப்பட்ட நிலையில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக சுமார் 2 ஏக்கர் சுற்றளவுள்ள பெரிய குளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சீரமைக்கப்படும் குளங்களில் பலவகையான மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து மற்ற குளங்கள் மற்றும் வரத்து வாய்க்கால்களை சீரமைக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

இளைஞர்களின் இந்த பணியை பார்த்து பலரும் நிதி உதவி மற்றும் பொருளாதார உதவிகள் போன்ற பல்வேறு உதவிகள் செய்து வருவதுடன் இளைஞர்களை பாராட்டியும் வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரிய குளத்திற்கு தண்ணீர் செல்லும் வரத்து வாய்க்கால் கரைகளை உடைத்து மண்ணை மர்ம நபர்கள் கடத்தி வருகின்றனர். இதனால் வரத்து வாய்க்கால் கரைகள் உடைந்து காணப் படுகிறது. திடீரென மழை பெய்து வாய்க்காலில் தண்ணீர் வந்தால் இளைஞர்கள் முயற்சியில் சீரமைக்கப்பட்ட குளத்திற்கு தண்ணீர் செல்லாமல் உடைத்து கொண்டு போகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது மீண்டும் அந்த கரையை கட்டி சீரமைக்க பல லாரி மண் கொண்டு வந்து சீரமைக்க வேண்டிய நிலையில் உள்ளது.

தண்ணீர் வரத்துவாய்க்கால் கரை உடைக்கப்பட்டுள்ளதை பார்த்த இளைஞர்கள் மிகவும் மனவருந்தி உள்ளனர். நீர் நிலைகளில் தண்ணீரை தேக்கி நிலத்தடி நீரை உயர்த்த சொந்த பணத்தையும், நேரத்தையும் செலவிட்டு வருகிறோம். ஆனால் மண்ணை கடத்தும் மர்மநபர்கள் இப்படி கரையை உடைத்துவிட்டு போகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மண்ணை கடத்தும் மர்ம நபர்களை கண்டறிந்து, மீண்டும் கரையை கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் மறுபடியும் மண்ணை கடத்தும் மர்ம நபர்கள் மொத்த கரைகளையும் சேதப்படுத்துவார்கள் என்றனர். இளைஞர்களுடன் கைகோர்க்கவில்லை என்றாலும் அவர் களின் செயலுக்கு தடங்கலாக இருக்கலாமா? என்றும் கூறினர்.

Next Story